Saturday, December 19, 2009

தலைக்கு மேல் தொங்கும் வாளாக பருவநிலை மாற்றம்

உலக நாடுகள் 119ம் இணைந்து டென்மார்க் நாட்டில், கோபன்ஹெகன் நகரில் கூடியுள்ளன. டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை ஒவ்வொரு நாட்டின் சுற்றுசூழல் அமைச்சர்களும், பிரதிநிதிகளும் பேசினார்கள். அவரவர் கருத்துக்களை கூறிவந்த பிரதிநிதிகள், உலகளாவிய ஒரு முடிவை எட்டுவதற்கு முன்சென்றார்களா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும், இடையில் தொடர்ந்து இழுபறி நிலை இருந்தது. இரண்டு முகாம்களும் தங்கள் கருத்தை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்தனர். வளர்ந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய பணக்கார நாடுகள், தங்களது நிதியுதவியை, வளரும் நாடுகளான ஏழை நாடுகளுக்கு கொடுத்து அதன் மூலம் வளரும் நாடுகள், தங்களது நாட்டிற்குள் இருந்து வெளியேறக் கூடிய கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கை களை எடுக்கவேண்டும் என்பதுதான் உலக கெங்கிலும் உள்ள நாடுகளின், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின், கருத்து. இதே கருத்தை ஐ.நா.வும் வலியுறுத்தி வந்தது. ஆனால் அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள் மேற்கண்ட கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடித்து வந்தன. அதன் விளைவாகவே பல முறைகளில், பல கூட்டங்களில் பருவநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதற்கான பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்தும் கூட, ஒத்த கருத்துக்கு இரண்டு முகாம்களும் வரமுடியவில்லை.ஐ.நா.வின் மூலம் பருவநிலை மாற்றம் பற்றியும், பூமி வெப்பமடைதல் குறித்தும், அதனால் உலகெங்கிலும் வரயிருக்கும் ஆபத்துக்கள் சம்பந்தமாகவும், விரிவாக பல மாநாடுகள் நடத்தப்பட்டு, அவற்றில் அனைத்து நாடுகளும் விவாதித்துள்ளன. அப்படி விவாதிக்கப்பட்ட மாநாடுகளில், முக்கியமானதாக ரியோடிஜெனரோ மாநாடு குறிப்பிடப்பட வேண்டும். அப்போது ஓசோன் லேயரில் ஓட்டை விழுந்திருக்கிறது என்ற செய்தியை ஆபத்தான செய்தி என்று உலகுக்கு அந்த மாநாடு அறிவித்தது. ஓசோன் லேயர் என்றால் பிராணவாயு மண்டலம் என்பதாக விளக்கப்பட்டது. அகிலத்தில் இருக்கின்ற பல்வேறு மண்டலங்களில், இந்த பிராணவாயு மண்டலம், முக்கியமாக உலகின் ஜீவராசிகள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற சீதோஷ்ண நிலை சமன்பாட்டை ஒரே நிலையில் தக்கவைத்துக் கொள்ள உதவி வருகிறது என்பதை புரியமுடிந்தது. அப்படிப்பட்ட முக்கியமான பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது என்றால், உலகில் இருக்கின்ற காற்றழுத்த மண்டலங்கள் மாறி, மாறி ஏற்றத்தாழ்வாகி வருகின்றன என்பதும் உணரப்பட்டது. அவ்வாறு பிராண வாயு மண்டலத்தில் ஓட்டை விழுகின்ற அளவுக்கு, எத்தகைய வாயுக்கள் உலகிலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த மண்டலத்தை தாக்குகின்றன என்ற விவாதம் எழுந்தது. சாதாரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதன அறைகள், குளிர்சாதனம் பொறுத்தப்பட்ட வாகனங்கள், நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற் சாலைகள், திரையரங்குகள், பல்அங்காடிகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு வாயுக்கள் அனைத்தும் வானத்தில் பறந்து சென்று, இந்த பிராண வாயு மண்டலத்தை தாக்குகின்றன. அப்படி வெளியேற்றப்படும் கழிவு வாயுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர் ஹெக்சா பிளோரைடு ஆகியவை நச்சு வாயுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாயுக்களை சாதாரணமாக பொதுமக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தில் அதிகமாக பயன்படுத்தி வெளியேற்றுவதால், நகர்மயமாதல் அதிகமாகும் சூழலில், உயர் தொழில் நுட்பங்கள் அதிகமாக உள்ளே நுழையும் காலத்தில், மேற்கண்ட நச்சு வாயுக்களின் வெளியேற்ற அளவு அதிகரிக்கிறது. இப்படி அதிகமான அளவு வாயுக்களை வெளியேற்றக்கூடிய நாடுகளாக, அமெரிக்காவும், சீனாவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாயு வெளியேற்றத்தால் ஏற்பட்ட பிராணவாயு மண்டல ஓட்டைகளால், உலகெங்கிலும் இருக்கின்ற உஷ்ணநிலை மாற்றமடைகிறது. அதையொட்டி இருக்கின்ற பனிக்கட்டிகள் நாளுக்கு நாள் உருகிவிடுகின்றன. அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள் பூமியை தாக்குகின்றன. கடல் அளவிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்கள் கடலை உள்வாங்குவதற்கும், அதையொட்டி நிலத்தின் அளவை அதிகப்படுத்துவதற்கும் சில நேரங்களில் பயன்படுகின்றன. அதே போல பல இடங்களில் கடல், நிலத்திற்குள் வீறிட்டு பாய்வதற்கும் வழி வகுக்கின்றன. அப்படி நடக்கின்ற நடவடிக்கைகள்தான், சுனாமி போன்ற பேரழிவுகளையும் ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவிலேயே கடல் நாட்டிற்குள் வந்து தொடுத்த பாதிப்புகளை, அந்த நாட்டு அரசாங்கமே தாங்க முடியாத சூழல் பிறந்தது. இதுபோன்ற கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகமாக செய்யக்கூடிய கருவிகளை வணிக நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யும் வணிக குழுமங்கள் பட்டியலிடப் படுகின்றன. குறிப்பாக அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டூப்பாண்ட் நிறுவனம், இதுபோன்ற நச்சு வாயு வெளியேற்றத்தை அதிகமாக உற்பத்தி செய்வதில், அதன் மூலம் பூமியை வெப்பமடைய செய்வதில் சாதனை படைத்துள்ளது. அதனால் அந்த டூப்பாண்ட் நிறுவனத்திற்கு, பசுமை அமைதி இயக்கம் என்ற உலக சுற்றுசூழல் இயக்கத்திலிருந்து, உலகிலேயே அதிகமாக மாசு கற்பித்தல் என்ற கேவலமான பணியை செய்ததாக ஒரு சான்றிதழை அளித்துள்ளது. அப்படிப்பட்ட டூப்பாண்ட் கம்பெனிதான், இந்தியாவிலுள்ள தாப்பர் கம்பெனியுடன் சேர்ந்து கொண்டு, தாப்பர் டூப்பாண்ட் என்ற ஆலையை, சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் நிறுவ எத்தனித்தனர். விமானங்களுக்கு தேவையான டயர்களை உருவாக்கக்கூடிய கம்பெனி என்ற பெயரில் இந்த ஆலை, கும்மிடிப்பூண்டியில் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை, ஆட்சியாளர்கள் ஒத்துழைப்போடு செய்தார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த முயற்சி அப்போதே, சுற்றுசூழல் ஆர்வலர்களாலும், வட்டார விவசாயிகளாலும், ஆலைத் தொழிலாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அதன் பிறகு பயோனியர் ஏட்டின் முதலாளியான தாப்பர் கம்பெனி, அந்த கூட்டு தொழிலிருந்து விலகிக் கொண்டது. அதன் விளைவாக டூப்பாண்ட் கம்பெனியின் தனது மாசுபடுத்தும் உற்பத்தியை மாற்றிக் கொண்டது. இப்படிப்பட்ட டூப்பாண்ட் கம்பெனி, அமெரிக்காவின் பன்னாட்டு மூலதன கம்பெனி என்ற காரணத்தினால், அமெரிக்க அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கியோடா நகரில் ஜி8 நாடுகள் என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகள் கூடி, பூமி வெப்பமடைதலையும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்காக சில திட்டங்களை தீட்டினார்கள். அப்படி தீட்டிய திட்டங்களை, கியோடா பிரகடனம் என்ற பெயரில் வெளியிட்டார்கள். அந்த பிரகடனத்தில் கூறியுள்ளபடி 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பணக்கார நாடுகளான வளர்ந்த நாடுகள், கணிசமான தொகையை நட்டஈடு போல, வளரும் ஏழை நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்றும், அதை வைத்து புதிய தொழில் நுட்பங்களையும் பெற்று, வளரும் நாடுகள் தங்கள் நாடுகளில் இருந்த வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்களின் அளவை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டமுடியும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்த பிரகடனத்தை அமெரிக்க அதிபராக ஜார்ஜ்புஷ் இருந்த காலம் வரை அமுல்படுத்தாமலேயே தள்ளிப் போட்டு வந்தார். ஒரு முறை ஜி8 நாடுகளின் கூட்டத்திற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சென்ற போது இந்த கியோடா பிரகடனத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை மன்மோகன் முன் வைத்தார். ஆனாலும் அதை அமெரிக்க அதிபர் அலட்சியப்படுத்தி விட்டார். அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மூலதன கம்பெனிக்கு நடத்துகின்ற உற்பத்தி குறைக்கப்படுமானால், அவர்களுக்கு கிடைக்கின்ற லாபம் குறைந்து விடும் என்பதனால் தன்நாட்டின் வணிக நலன்களுக்காக அமெரிக்க அரசு இந்த பிரகடனத்தை அமுல் படுத்தாமலேயே காலத்தை தள்ளி வந்தது. அதற்கு பிறகு வந்த பாரக் ஒபாமா முற்போக்கு முகத்தை காட்டிக் கொண்டிருந்தாலும், இந்த விசயத்தில் ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையையே பின்பற்றி வந்தார்.இதற்கிடையே கோபன் ஹெகன் மாநாட்டிற்கு முன்பே இரண்டு மாத காலமாக, மாநாட்டிற்கான வரைவு நகலை தயார் செய்வதற்காக நாடுகளுக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அப்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வளரும் நாடுகளை முதலில் வாயு வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ளும் படி வற்புறுத்தி வந்தன. குறிப்பாக இந்தியாவையும், சீனாவையும் வலியுறுத்தி வந்தன. அது சம்பந்தமாக இந்தியா வந்த, ஹிலாரி கிளின்டனும் அப்படிப்பட்ட வற்புறுத்தல்களையும் செய்து தோல்வியுற்றார். இப்போது கோபன் ஹெகன் மாநாட்டில் முதல் பத்துநாட்களும் ஒரு முடிவு வராத நிலையில், அமெரிக்கா 10,000 கோடி டாலர்களை 2020க்கு பிறகு தாங்கள் தரவேண்டும் என்றால், ஏழை நாடுகள் அதற்கு முன்பே தங்கள் நாட்டு வாயு வெளியேற்றத்தை குறைத்து அதை சட்டமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதை இந்தியா, சீனா உட்பட ஜி77 நாடுகள் நிராகரித்தன. அதன்பிறகே மன்மோகனும், வென்னும் மாநாட்டை விட்டு வெளிநடப்பு செய்து, மீண்டும் உள்நடப்பு செய்யும் நாடகம் அரங்கேறியுள்ளது. இப்போது இல்லா விட்டாலும், அடுத்த ஆண்டு என்பதாக மன்மோகன் சமரச உரை நிகழ்த்தியுள்ளார். உலக மக்கள் தலைகளுக்கு மேல் தொங்குகின்ற வாள் கூர்மையாக இறங்கி வந்து கொண்டேதான் இருக்கிறது.