Saturday, November 7, 2009

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?


ரஷ்ய புரட்சி என்று அழைக்கப்பட்ட 1917ம் ஆண்டு நடந்த புரட்சி, நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அது ஜார் மன்னருடைய ஆட்சியில் தூக்கி எறிந்து, சோவியத் யூனியன் என்ற புதியதொரு நாட்டை உருவாக்க உதவியது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்தை, ரஷ்ய புரட்சியை நினைவு கொள்வதற்காக உலகமெங்கிலும் கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, ஜனநாயகத்தை விரும்புவோரும், மன்னார் ஆட்சியை எதிர்ப்போரும், கொண்டாடுவது வழக்கம். போல்ஷ்க் கட்சி என்ற பெயரில், அப்போது லெனின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கப்பட்டது. சோவியத் யூனியனின் அந்த வெற்றி, உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை உணர்த்தியது.

அதன் விளைவாக உலகமெங்கிலும், 1917க்கு பிற்பாடு பல நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. உலகில் பெரும்பாலான நாடுகளில், ஆட்சி அதிகாரத்தில் பெரும் பண்ணையார்களோ, அண்ணாவின் வார்த்தையில் நிலம் ஆளும் முதலாளிகளோ, நிலங்களை குவித்து வைத்துக் கொண்டு இருக்கும் நிலத்திமிலங்களின் நலன்களை பாதுகாப்பவர்களோ இருந்து வந்தார்கள். அவர்கள் உள்நாட்டு முதலாளிகளைக் கூட, வளரவிடுவதில்லை. இதை மார்க்சிய வாதிகள், நிலப்பிரபுத்துவ ஆட்சி முறை என்பதாக வர்ணித்தார்கள். நிலம் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து, தொழிற்சாலைகள் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடிய சமுதாய அமைப்பை, முதலாளித்துவ சமுதாய அமைப்பு என்று அழைக்கிறார்கள்.

அப்படி நிலம் சார்ந்த பொருளாதாரமான, நிலப்புரபுத்துவ சமுதாய அமைப்பை, மாற்றியமைத்து முதலாளித்துவ சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கு உள்ள முயற்சி என்பது வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறியிருக்கிறது. அது வெற்றி பெற்ற நாடுகளின் சமுதாய அமைப்பை, முதலாளித்துவ அமைப்பு என்பதாக அழைப்பதும், அத்தகைய நாடுகளை முதலாளித்துவ நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம். அதுபோல புதிய சமுதாய அமைப்பை உருவாக்கிய நாடுகளாக, இங்கிலாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மன் நாட்டில் வளர்ந்து இருந்த முதலாளித்துவ அமைப்பை நேரில் அனுபவித்த காரணத்தினால்தான், அங்குள்ள தொழிலாளர்களது அவல நிலையை விரிவாக தெரிந்து கொண்டு, அதன் மீது ஒரு சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வுகளை செய்த அடிப்படையில்தான், காரல்மார்க்ஸ் தனது மூலதனம் என்ற புத்தகத்தை எழுத முடிந்தது. அதில் அவர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை தூக்கி எறிந்து விட்டு முதலாளித்துவ சமுதாய அமைப்பு அமைக்கப்பட்ட விவரத்தை கூறுகிறார்.

மூலதனம் புத்தகம் அரசியல் பொருளாதாரம் பற்றி அடிப்படையாக விவரிக்கப்பட்டிருந்தாலும், காரல்மார்க்ஸ் எழுதிய மற்ற புத்தகங்களிலிருந்து, முதலாளித்துவத்தின் மூல வேர்களை அவர் விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற முதலாளிகளுடைய ஆட்சி அதிகாரத்தில், தனது உழைப்பு சக்தியை விற்று விட்டு, அதன் ஒரு பகுதியை மட்டும் கூலியாக பெறுகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி அவர் எழுதுகிறார்.

நிலவுடமை சமுதாயத்தில் வாழ்ந்து வரும் பெருவாரியான உலக மக்களுக்கு, வெல்லப்படமுடியாத, வளர்ச்சியடைந்த, விஞ்ஞானத்தை சார்ந்த சக்தி, முதலாளித்துவ அமைப்பு என்ற எண்ணமே இருந்தது. அப்படிப்பட்ட முதலாளித்துவ சமுதயாத்தைக்கூட, தூக்கி எறிய முடியும் என்றும், தொழிலாளி வர்க்கத்தினுடைய தலைமையில் ஒரு ஆட்சியை நிறுவிக்கொள்ள முடியும் என்றும், உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியது, ரஷ்யாவின் நவம்பர் புரட்சி. அதனால்தான் உலகமெங்கிலும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு, ஒரு ஒளிவிளக்கு போல, ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சி தோன்றியது. அதன் மூலம் நிலமற்ற, ஏழை உழவர்கள் உட்பட, அனைத்து உழைக்கும் மக்களுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கு செல்லும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி, சமுதாய அமைப்பையே மாற்றியமைக்க முடியும் என்ற புதிய உண்மையை புரிய வைத்தது 1917ன் நவம்பர் புரட்சி.

அதனால்தான் அத்தகைய ரஷ்ய புரட்சிக்கு பிறகு, உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இத்தகைய நம்பிக்கை ஏற்பட்டு, பல நாடுகளில் பொதுவுடமை கருத்துக்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளை உருவாக்கினார்கள். ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் என்ற மன்னன் கொடுங்கோலன் என்று நம் முன்னால் வர்ணிக்கப்படுகிறது. பாரதியாரும் கூட, கொடுங்கோலன் ஜார் வீழ்ந்தான். ஆவென எழுந்தது யுகப்புரட்சி என்று எழுதுகிறார்.

மாகாளி கண் திறந்தால் என்பதாக தன்னுடைய நம்பிக்கையை, தனக்கு கிடைத்த புதிய நம்பிக்கையுடன் இணைத்து எழுதுகிறார் பாரதி. அத்தகைய முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுதான் இந்த நவம்பர் புரட்சி. செயின் பீட்டர்ஸ் பர்க்கை சுற்றி எழுந்த தன்னெழுச்சியான புரட்சியாக, பிப்ரவரியில் நடந்த புரட்சிகர செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. ஜார் ஆட்சியை தூக்கி எறிந்து தற்காலிக அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அக்டோபர் மாநிலத்தில் தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டு, போல்ஷ்விக் அரசாங்கம் நிறுவப்படுகிறது. ரஷ்யாவில் தற்காலிக அரசாங்கம் நிறுவப்படும் போது, டூமா என்று அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பு முறை ஏற்படுத்தப்படுகிறது.

சோவியத்துக்கள் என்பது தொழிலாளர்களுடைய கவுன்சில்கள் என்று பொருள்படும். பிப்ரவரி புரட்சி என்று அழைக்கப்பட்ட ரஷ்யாவின் புரட்சி முதல் உலகப் போர் கால கட்டத்தில் நடந்தது. அப்போது ரஷ்யாவின் ராணுவம் பெருமளவுக்கு தாக்கப்பட்டு பின்வாங்கியிருந்தது. அதனால் சிப்பாய்களுக்குள் கலவரம் நீடித்தது. தற்காலிக அரசாங்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்த சோசலிச சிந்தனையாளர்கள், இடது சாரி திசைக்கு அதை எடுத்து சென்றார்கள். குழப்பமான சூழ்நிலையில், தொடர் கலகங்களும், வேலைநிறுத்தங்களும் நடந்தன. தற்காலிக அரசாங்கம் ஜெர்மனி நாட்டுடன் சேர்ந்து கொண்டு, போல்ஷ்விக்குகைளயும், மற்ற சோசலிச பிரிவுகளையும் இணைத்து கொண்டு செயல்பட்டன.

செம்படை ஒன்றை கட்டி அதை ஆயுதம் தாங்கிய படையாக உருவாக்கியிருந்த போல்ஷ்விக்குகள், அதன் மூலம் எளிதாக ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரமுடிந்தது. அரசாங்க அதிகாரத்திலும், அனைத்து பொருட்களிலும், போல்ஷ்விக்குகள் அமர்த்தப்பட்டார்கள். 1918ல் நடந்த ஜெர்மனியுடனான ஒப்பந்தத்தில் போல்ஷ்விக்கள் கையெழுத்திட்டார்கள். ஆனாலும் கூட, போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் என்ற இருசாரர் மத்தியில் உள்நாட்டு போர் போல மோதல் நடந்தது. அதில் போல்ஷ்விக்குகள் என்று அழைக்கப்பட்ட பெரும்பான்மையினர் என்று பொருள் கொண்ட லெனின் தலைமையிலான பிரிவினர் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் தான் சோவியத் ரஷ்யாவின் ஒன்று பட்ட நாடுகள் என்ற யூ.எஸ்.எஸ்.ஆர். உருவானது.மேற்கண்ட அனுபவங்கள் பாட்டாளி வர்க்கம் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளர்களான, முன்னேறிய வர்க்கத்தின் தலைமையில், அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் அணி திரட்டப்பட்டு, மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உழைப்பவர்கள் தான் என்ற உண்மையிருப்பதனால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற விவரம் உலகிற்கு கிடைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை என்பதாக அழைப்பார்கள். ரஷ்ய புரட்சியை வெற்றிகரமாக நடத்திய லெனினது பாதை என்பது, காரல்மார்க்ஸ் வழிவகுத்து கொடுத்த பாதையை, நடைமுறை படுத்தி செயலிலே வென்ற ஒரு நிகழ்வு அதனால் காரல்மார்க்சிற்கு பிறகு, உலகமெங்கிலும் பெரும்பான்மையாக அவரை பின்பற்றியவர்கள், லெனினை ஏற்றுக் கொண்டு, அவரது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, லெனினிஸ்டுகளாக பவனி வந்தார்கள். இன்னமும் கூட, மார்க்சியம் என்ற சமூக அறிவியல் தத்துவத்திற்கு, லெனினது பங்களிப்பு புதிய, புதிய படைப்பாற்றல் மிக்க, உலகம் பற்றிய சித்தரிப்பு என்பதை மறுக்க முடியவில்லை.லெனினது ரஷ்யாவை நேரில் சென்று பார்த்து வந்த தந்தை பெரியார், அதே பாதையில் சமத்துவத்தை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தார்.

தந்தை பெரியாரை ரஷ்யநாடு சென்று, அனுபவங்களை பார்த்து வருவதற்கு ஏற்பாடு செய்த, பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர். இந்த சிங்கார வேலர் சென்னையில் உள்ள, மயிலாப்பூரில் நடுக்குப்பத்தில், ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர். சிங்கார வேலரது செயல்பாடுகளும், கருத்துகளும் கூட, இன்று வரை உயிர்ப்புடன் நிற்கிறது. அதனால் இந்த நவம்பர் மாதம், உலக வரலாற்றிலிருந்து நமக்கு அதிகமான பலத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாமா?