Thursday, December 31, 2009

கேரள மார்க்சிஸ்ட் கட்சியை அழிக்க சதியா?

நேற்று எர்ணாகுளம் என்று அழைக்கப்படுகின்ற கொச்சின் நகரில், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் பினராய் விஜயன், தன்மீது சுமத்தப்பட்ட கடுமையான ஊழல் வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான பிணையை பெற்றுள்ளார். அவருடன் நீதிமன்ற வளாகத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் செம்படைத் தொண்டர்கள், பினராய் விஜயனுக்கு ஆதரவாக கோபாவேசமாக திரண்டு இருந்தார்கள். சி.பி.ஐ.யால் போடப்பட்ட ஊழல் வழக்கில், விஜயன் நேற்று பிணை பெற்றார். ஆனாலும் கூட அந்த வழக்கு பினராய் விஜயனுடைய கட்சி வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி விட்டது. 1997ம் ஆண்டு இடது முன்னணி ஆட்சி அதிகாரத்திலிருந்த போது, பினராய் விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கேரளாவிலிருக்கும் மூன்று மின் உற்பத்தி திட்டங்களுக்காக, கனடா நாட்டிலுள்ள ஒரு நிறுவனமான எஸ்.என்.சி. லாவலின் உடன் ஒப்பந்தம் பேசப்பட்டது. ஒப்பந்தத்தில் பேரம் நடந்ததாகவும், பேரத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் ரூ.374 கோடி லஞ்சமாக வாங்கப்பட்டதாகவும், அதில் பினராய் விஜயனுக்கு பங்கு உண்டு என்பதாகவும் ஒரு வழக்கு சி.பி.ஐ.யால் போடப்பட்டது. இதற்காக சிறப்பு பிரிவு ஒன்றை சி.பி.ஐ. நிறுவியிருந்தது. இந்த வழக்கில் கேரள மாநில மின்வாரியத்தின் 6 முன்னாள் அதிகாரிகளும், கனடா நாட்டு லாவலின் நிறுவன பொறுப்பாளர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு விவகாரமாக காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே, விஜயன் மீதான புகார்களையும், அவதூறுகளையும் அள்ளித்தெளித்து வந்தது. கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் உட்கட்சி சண்டையில், அங்கே இருக்கும் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தத்திற்கும், மாநில கட்சி செயலாளர் பினராய் விஜயனுக்கும் ஒரு பிணக்கு தொடர்ந்து இருந்தது. அந்த பிணக்கின் காரணமாக, திடீரென அச்சுதானந்தன், விஜயன் மீதான வழக்கை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஊழல் எதிர்ப்பில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியது பிரச்சனையை மேலும் பெரிதாக்கியது.மார்க்சிஸ்ட் கட்சி இடது முன்னணிக்கு தலைமை எடுத்து, சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் போதே, இந்த இரண்டு தலைவர்களுக்கும் மத்தியிலுள்ள பிரச்சனை பூதாகர வடிவம் எடுக்கத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில் வழக்கமாக காங்கிரஸ் கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால், அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை மக்கள் இடது முன்னணி கரங்களில் கொடுப்பார்கள். இப்படி ஒரு பழக்கம் கேரள வாக்காளர்களுக்கு இருந்து வரும் சூழ்நிலையில், சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, இடது முன்னணி கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. அப்படி ஆட்சிக்கு வரும்போது, சி.பி.எம். கட்சியை சேர்ந்தவர்தான் முதல்வராக வரமுடியும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. வயதில் மூத்தவரான மற்றும் கட்சியின் பாரம்பரிய தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன் தேர்தலில் நிற்பதற்கு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால், வெற்றி பெற்று முதலமைச்சராக எளிதாக அங்கீகரிக்கப்படுவார் என்று, அவருக்கு எதிர்முகாமின் தலைவராக இருந்த பினராய் விஜயன் எண்ணினார். மாநிலத்தின் கட்சியை தனது கடின உழைப்பின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி எழுப்பி, பினராய் விஜயன் தலைமை தாங்கி வந்தார். மாநில கட்சித்தலைவர்களில் இரண்டு கோஷ்டியை சேர்ந்தவர்களும் இருந்து வந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுத்தேர்தலில் நிற்பதற்கே, வி.எஸ்.அச்சுதானந்ததிற்கு, பினராய் விஜயன் வாய்ப்பு கொடுக்கவில்லை. அதாவது அச்சுதானந்தனை ஒரு வேட்பாளராக அறிவிக்கவில்லை. இந்த செயலை எதிர்த்து அச்சுதனாந்தன், அகில இந்திய கட்சி தலைமையிடம் முறையிட்டார். மாநிலத்தின் கீழே உள்ள பல்வேறு மாவட்ட கிளைகளில் இருந்த செந்தொண்டர்களும், அகில இந்திய தலைமையிடம் முறையிட்டார்கள். உடனடியாக சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு, அச்சுதானந்தத்திற்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கும்படி பணித்தது. வேறு வழியில்லாமல் பினராய் விஜயனும் ஒப்புக் கொண்டார். அச்சுதானந்தன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். கட்சி தலைமை தலையீட்டில், மீண்டும் பினராய் விஜயனின் விருப்பத்திற்கு எதிராக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மீண்டும் இருவருக்கும் இடையிலிருந்த பனிப்போர் தீவிரமானது. மலையோரங்களில் பெரும் மூலதன நிறுவனங்களால் நிலங்கள் அதிகமான அளவில் ஆக்கரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை எல்லாம் மீட்டெடுக்க, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கு, முதல்வர் அச்சுதானந்தன் திட்டமிட்டார். அத்தகைய பணக்கார நிறுவனங்களின் தொடர்பிலிருந்த பினராய் விஜயன் அதை எதிர்த்தார். அச்சுதானந்தன் தான் நினைப்பதை பல இடங்களில் சாதித்துக் கொண்டார். ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிக்கப் பட்ட நிலங்கள் மீட்கப்பட்டன. பொதுமக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் அச்சுதானந்தன் நேர்மையானவர் என்பதான எண்ணம் உருவானது. பினராய் விஜயனை, நடிகர் மம்முட்டியுடன் இணைத்து, கைராளி தொலைக்காட்சி நிர்வாகத்தை கைப்பற்றியதாக தொண்டர்கள் மத்தியில் முணுமுணுப்பு கூடத் தொடங்கியது. அடுத்ததாக மேலே சொல்லப்பட்ட லாவலின் வழக்கு தொடுக்கப்பட்டது. அது காங்கிரஸ் கட்சி செய்கின்ற சதி என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியது. அகில இந்திய தலைமையும், பினராய் விஜயனுக்கு ஆதரவாக, காங்கிரஸ் சதி என்பதாகவே அறிவித்தது. ஆனால் கேரள முதல்வர் மட்டும், ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறிவந்தார். முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கை பதிவு செய்வதற்கு இந்நாள் அமைச்சரவையின் ஒப்புதலுடன், மாநில ஆளுநரிடம் சி.பி.ஐ. அனுமதி பெற வேண்டியது இருந்தது. இத்தகைய அனுமதிக்கு பச்சைக் கொடி காட்டினார் அச்சுதானந்தன். அதன் விளைவாக ஜுன் மாதத்தில் லாவலின் வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த பிரச்சனை மீண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு சென்றது. இதற்கிடையே கேரள சி.பி.எம்.மிற்குள் கட்சி தேர்தல் வந்தது. அதில் அச்சுதானந்தன் தொடர்பிலிருந்த ஆலப்புழை, பாலக்காடு, கோழிக்கோடு, ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும், முதல்வர் வி.எஸ்.சின் ஆதரவாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற அனைத்து மாவட்டங்களும், பினராய் விஜயன் பிடிக்குள் சென்றது. இந்த மோதலிலும் விஜயன் வெற்றி பெற்றார். நிறைவாக திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமான ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணியை விஜயன் நடத்திக் காட்டினார். அந்த மேடைக்கு வரமறுத்த வி.எஸ்.ஐ, அகில இந்திய மார்க்சிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் பிரகாஷ் கரத் வற்புறுத்தி, கூட்டணி கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தலைவர் மூலம், மேடைக்கு அழைத்து வரப்பட்டார். இப்படியாக இருவருக்கும் மத்தியில் உள்ள மோதல் தொடர்ந்து பகிரங்கமாகி வருகிறது.இதே போல அரசியல் அரங்கில் சி.பி.எம். , மக்கள் ஜனநாயக கட்சி என்ற அப்துல் நாசர் மதானியின் அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு காரணமாக இருப்பவர் பினராய் விஜயன். அவர்களது வாக்கு வங்கியை உடைத்தெறிய விரும்பிய காங்கிரஸ் தலைமை, மதானி மீதும் தற்போது மதானி மனைவி சூபியா மீதும் குற்றம் சுமத்தி, தீவிரவாத முத்திரையை வழக்குகளின் மூலம் பரப்பி வருகிறது. இதற்கு துணை போவது போல, முதல்வர் வி.எஸ்.ம், மதானியை தீவிரவாதி என்றும், அவரது கட்சியுடன் சி.பி.எம்.மிற்கு இனி தொடர்பு இருக்காது என்றும் அறிவித்து வருகிறார். மாதனியும், விஜயனும் ஒரே மேடையில் தோன்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததால்தான், சி.பி.எம். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோற்றதாக அச்சுதானந்தன் பரப்பி வருகிறார். இதுவே சி.பி.எம். கட்சியின் அடித்தளமான பெரும்பான்மை மதம் சார்ந்த மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே இந்த குழப்பங்களுக்கு காரணமான அச்சுதானந்தத்தை, அரசியல் தலைமைக்குழுவிலிருந்து சி.பி.எம். விலக்கி விட்டது. இப்போது அவரை முதல்வர் பொறுப்பிலிருந்து விலக்க முடியாமல் கட்சித் தலைமை திணறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இத்தகைய சூழலில், வழக்குகள், சி.பி.ஐ. போன்றவற்றின் மூலமே மேலிருந்து அரசியல் செய்து, சி.பி.எம். கட்சியை இரண்டாக உடைத்து, நிரந்தரமாக இடதுகளின் கேரள அடித்தளத்தை நொறுக்கி விடலாம் என்ற கணக்கில் இருக்கிறது. இது எங்கு போய் சேரும் என்பதே இப்போது கேள்வி.

Wednesday, December 30, 2009

இலங்கையில் பூசா முகாமில் அடைக்கப்பட்ட 1000 தமிழர்கள் பட்டியல்

1. வெள்ளை வாகன கடத்தலில் பாதிக்கப்பட்ட 4000 தமிழர், முஸ்லீம் பற்றிய ரகசியம் அம்பலம் .

2. கோத்தபாய ராஜபக்சேயின் சதி வெளிப்பட்டது .

3. அதிபர் தேர்தல் களேபரத்தில் உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.


இலங்கைத் தீவில் இனவாத போரை நடத்திய அரசு, அதற்கிடையே அப்பாவிமக்கள் மீது வெள்ளை வாகன கடத்தல் மற்றும் படுகொலைகளை நடத்திக் கொண்டிருந்தது, உலகறிந்த செய்தி. அப்படி கடத்தப்பட்டவர்களது எண்ணிக்கை 4000 வரை தொட்டது. 4ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு, மலையகம், புத்தளம், கிழக்கு மாவட்டங்கள், வவுனியா, யாழ்பாணம் ஆகியவற்றிலிருந்து கடத்தப்பட்டிருந்த, தமிழர்கள் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் 1000 பேர், பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி நேற்று கசிந்தது. பூசா முகாம் என்பது தென்னிலங்கையில், சிங்களப் பகுதியில் இருக்கிறது. இதில் 25 பிளாக்குகள் இருக்கின்றன. அதில் முதல் 5 பிளாக்குகளுக்குள் இருக்கின்ற தமிழர்கள் எண்ணிக்கைதான் 1000. இந்த முகாமிலிருந்து தப்பி வெளியே வந்த இளைஞர் ஒருவர் கொடுத்த பட்டியலில் 1000 பேருடைய பெயர்கள் இருக்கின்றன. வெளிவந்துவிட்ட இந்த செய்தியை உறுதிப்படுத்திய அரசுதரப்பு, தனது மனித உரிமை துறையின் மூலம், 1000 பேருடைய குடும்பங்களுக்கும் செய்தி அனுப்பி, அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளது. இது தேர்தல் நேர விளையாட்டு. அதேசமயம் பூசா முகாமில் உள்ளே உள்ள 15 பிளாக்குகளில், மீதம் 3000 கடத்தப்பட்ட, அப்பாவி தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் இப்போது தெரிகிறது

சாண்ட்விச்’ ஆக சிக்கிக்கொண்ட ஆதிவாசிகளும், ஊரக ஏழைகளும்!

டெல்லியில் மாணவர்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள். சத்திஸ்கர் மாநிலம் உட்பட மத்திய இந்தியாவில் நடைபெறும் ரத்தக்களரிகள், டெல்லி மாணவர்களின் உதிரத்தை கொதிக்க வைத்து, உணர்வுகளை எழுப்பியிருக்கிறது. டெல்லியிலிருந்து செல்கின்ற ஊடகயியலாளர்கள், தாங்கள் நேரில் பார்த்து வந்த நிகழ்வுகளை, தலைநகர் டெல்லியில் படம்பிடித்துக் காட்டுகிறார்கள். இவர்களெல்லாம் டெல்லி மாணவர் சமூகத்திலிருந்து வெளியே வந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கண்ட காட்சிகளை, டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பலகலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள் உடனடியாக கிரகித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இடையிலே சிக்கிக்கொண்டவர்களாக, அவர்களால் வருணிக்கப்படும் ஆதிவாசிகளும், கிராமப்புற ஏழைகளும் வருணிக்கப்படுகிறார்கள். சத்திஸ்கர் மாநிலத்தில் சல்வா ஜுடும் என்ற கூலிப்படையும், காவல்துறையும் பச்சை வேட்டை நடவடிக்கையும் ஒருபுறம் ஆதிவாசிகளையும் கிராமப்புற ஏழைகளையும் கொடுமைப்படுத்துகிறது என்று சொன்னால், மறுபுறம் ராணுவ மயமாக்கப்பட்ட இந்திய அரசு இயந்திரம், பயங்கரவாதிகளாக வருணிக்கப்பட்ட ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இந்த சண்டைக்கு இடையே சிக்கிக்கொண்ட சாண்ட்விச்களாக அந்த ஏழை மக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இத்தகைய விவரிப்புத்தான் இப்போது டெல்லி அறிவுஜீவிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஒருபுறம் துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற கொள்கையை தாங்கி வருகின்ற மாவோயிஸ்டுகள். இன்னொருபுறம் ஆதிவாசிகள் அனுபவித்து வரும் பாரம்பரிய நிலங்களையும், இயற்கை மூலாதாரங்களையும், அவர்களிடமிருந்து பறித்தெடுத்து, வெளிநாட்டு, உள்நாட்டு கார்பரேட்டுகளுக்கு, கொடுக்க எத்தனிக்கும் இந்தியா அரசு. இந்த இரண்டிற்கும் மத்தியில் தான் சிக்கியிருக்கிறார்கள் ஏழை மக்கள். இந்திய அரசியல் சட்டத்தில் மத்திய இந்தியா பற்றி, நாட்டிற்கே பாதுகாவல் தளமாக வருணிக்கப்பட்டிருக்கும் பூமிதான், இன்று சாண்ட்விச் தத்துவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தத்துவத்தை பேசுபவர்கள், இது வன்முறைக்கும், அகிம்சைக்கும் மத்தியிலான பார்வை வேறுபாடு என்பதாக மட்டும் எண்ணுகிறார்கள். விவாதத்திற்கு அதிகமாக வரவிரும்பாமல், வன்முறை வேண்டுமா, அல்லது அகிம்சை வேண்டுமா என்பதாக அவர்கள் சிந்திக்கிறார்கள். இந்த தத்துவம் பேசுபவர்கள் கல்விக் கூடங்களிலும், ஊடகங்களிலும் நிர்வாக நிறுவனங்களிலும் முக்கியமான பொறுப்புகளிலிருக்கிறார்கள். சல்வா ஜுடும் என்ற அரசாங்கம் தயாரித்த கூலிப்படையையும், அரசப்படைகள் செயல்படும் பச்சை வேட்டையையும் இவர்கள் எதிர்த்தாலும், அவர்களது புரிதல் மத்திய இந்தியாவை பிளவுபடுத்திப் பார்க்கிறது. சாண்ட்விச் தத்துவத்திற்கும், ஜனநாயக மதிப்பீடுகளுக்கும் மத்தியிலேயிருக்கின்ற விவாதமாக அவை மாறியுள்ளன. மத்திய இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனநாயகம் என்பது ஒவ்வொரு ஆண், பெண், குழந்தை, நகர்ப்புற அல்லது கிராமப்புற ஏழைகள், ஆகியோரிடையேயும், எந்த சாதியாயிருந்தாலும், தேசிய இனமாகயிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றும் புரியப்பட வேண்டும். தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையை ஜனநாயகம் நம்புகிறது. அதனால் இந்த சாண்ட்விச் தத்துவம் என்ற இடையிலே சிக்கியிருக்கும் தத்துவம் அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிரானது. மத்திய இந்தியாவில் வசிக்கின்ற பெருவாரியான மக்கள், தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பொருளாதார கொள்கைகளினால், ஆதிவாசிகளும், கிராமப்புற ஏழைகளும் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். சாண்ட்விச் தத்துவக்காரர்கள் விளக்கப்படி, அப்படிப்பட்ட ஏழைகளை மாவோயிஸ்டுகள் தங்களது இலக்கிற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான். ஆனாலும் கூட அதில் ஒருபகுதி ஆதிவாசிகளும், கிராமப்புற ஏழைகளும், மாவோயிஸ்டுகளின் பாதையில் செல்வதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று இவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். தங்கள் நலனுக்கானதை தேர்வு செய்யவும், தங்கள் நலனுக்காக போராடுபவர்களை அடையாளம் காணவும், அந்த ஆதிவாசிகளுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் அறிவு போதாது என்பது இந்த அறிவுஜீவிகளின் கண்டுபிடிப்பு. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலிருந்தும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்தும், ஐ.ஐ.டி.யிலிருந்தும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்தும், சிவில் சமூகம், ஆகிய பிரிவுகளில் உள்ளவர்கள் பேசுகின்ற அறிவுகூர்ந்த மொழியில் தங்களது அரசியல் வாய்ப்புகளை, இந்த ஆதிவாசிகளும், ஏழை மக்களும் எடுத்து மொழிவதில்லை. அதனால் அவர்கள் சுயநிர்ணய உரிமையில்லாத, அமைதியான பலியாடுகள் என்ற உண்மை அறிவுஜீவிகளுக்கு உறைப்பதில்லை. அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் மத்தியிலே வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட பலியாடுகள் என்று இவர்களை விவரிப்பதன் மூலம், மத்திய இந்தியாவில் அவர்கள் சமத்துவமுள்ள மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும். ஆதிவாசி மக்களையும், கிராமப்புற ஏழைகளையும் குரலற்ற பலியாடுகள் என்பதாக சித்தரிப்பது புதிதல்ல. இந்திய சுதந்திரக் காலத்திலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகப்போருக்குப் பிறகு ஏழ்மை என்பதை தீர்ப்பதற்காக, வளர்ச்சி என்றச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மிகவும் கொடூரமான ஒரு கருத்துக்கோப்பு. அத்தகைய கருத்துக்கோப்பை கண்ணுக்குத் தெரியாத சந்தை என்ற கருத்துக்கோப்பு, விரைந்து முழுங்கிவிட்டது. அதனாலேயே அது சிலரை வசதியுள்ளவர்களாகவும், பெரும்பான்மையை இல்லாதவர்களாகவும் ஆக்கிவிட்டது. ஏழைகள் என்பவர்கள், விளிம்பு நிலைமக்கள் என்பதாக விவரிக்கப்பட தொடங்கினார்கள். மேற்கண்ட விவாதங்களை தன்னுடைய கட்டுரையில் ராதா டிசௌசா எழுதுகிறார். சத்திஸ்கர் மாநிலத்தின் நிலைமை புதியதொரு சூழலை எட்டிக்கொண்டிருக்கிறது. அரசப்படைகளாலும், அவர்களால் உருவாக்கப்பட்ட கூலிப்படையான சல்வா ஜுடுமாலும் தாக்கப்படும், அச்சுறுத்தப்படும், கடத்தப்படும், கொலைசெய்யப்படும் ஆதிவாசி மக்களுக்காகவும், கிராமப்புற ஏழைகளுக்காவும், ஜனநாயக குரல் எழுப்பிவரும் மனித உரிமை ஆர்வலர்களும், காந்தியவாதிகளும் கூட, சமீபத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தங்களுடைய குரலை எழுப்புவதற்காக அவர்கள் ஏற்பாடு செய்யும் குறைந்தபட்ச பரப்புரை பயணங்கள் கூட தடுக்கப்படுகின்றன. அப்படித்தான் ஹிமன்ஷû குமார் என்ற காந்தியவாதி தொடங்கிய பாதயாத்திரையும் தடுக்கப்பட்டது. தெற்கு சத்திஸ்கர் மாநிலத்தில், தண்டவாடா பகுதியில், வனவாசி சேத்னா ஆசிரமம் என்ற காந்தியவாதிகளின் குடிலை, குடியிருப்பு இடமாகக் கொண்டு, இந்த ஹிமன்ஷû குமார் செயல்பட்டு வருகிறார். ஆதிவாசிகள் மீது நடத்தப்படும் தொடர் வன்கொடுமைகளை எதிர்த்து இவர், 900 மக்கள் கையெழுத்திட்ட மனுவுடன், ஒரு ஜனநாயக ரீதியான அகிம்சை வழி பாதயாத்திரையை மேற்கொண்ட போதுதான் நிர்வாகம் அவரைத் தடுத்தது. அதனால் டிசம்பர் 26ம் தேதியிலிருந்து அவர் அதே இடத்தில் பட்டினிப் போராட்டத்தை, சாகும்வரை என அறிவித்து தொடங்கியுள்ளார். அந்த வட்டாரத்தில் ஆதிவாசி மக்கள் மத்தியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த காந்தியவாதி செயல்பட்டு வருகிறார். பட்டினிப் போராட்டத்திற்கான காரணத்தைக் கூறுகின்ற ஹிமன்ஷû, பல லட்சம் ஆதிவாசி மக்கள் கோரமான வறுமையிலும், பட்டினியிலும் வாழ்கின்ற ஒரு நாட்டில், பட்டினி கிடப்பதும் கூட, ஒரு போராட்ட வடிவம் தான் என்று கூறுகிறார். அவர்களுடைய கஷ்டங்களுடன் நானும் கலந்து கொள்கிறேன் என்று அவர் அறிவித்துள்ளார். அவருக்கு தோழமை காட்ட அதே நாளில் மும்பையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. டெல்லியில் ஒரு மெழுகுவர்த்திப் பேரணி நடந்தது. உலகெங்கிலும் ஆதரவுக் குரல் எழும்பியுள்ளது. சென்னையிலும், 2010ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி தோழமை குரல்கள் எதிரொலிக்கயிருக்கின்றன.17.10.2008ம் ஆண்டின் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இடம்பெயர்ந்த கிராமத்தவர்களுக்கு உடனடியாக மறுவாழ்வு கொடுக்கக்கோரியும், கோபா குஞ்சம் மற்றும் சுக்நாத் போன்ற தொண்டர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களை காவலில் அடித்துதைத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட புகார் கொடுக்கும் ஆதிவாசிகளுக்கு பாதுகாப்பும், நீதியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகைளை முன்வைத்து இத்தகைய ஜனநாயக குரல்கள் எழுப்பப்படுகின்றன. தமிழகத்தின் மனசாட்சியும் இதில் இணைந்து கொள்ளுமா என்பதே கேள்வி.

Tuesday, December 29, 2009

இலங்கை அதிபர் தேர்தலை தவிர்க்கக்கூடாதா?

இலங்கைத் தீவில் அரச அதிபருக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றைய அதிபரான மகிந்த ராஜபக்சே ஒரு வேட்பாளர். அவரை எதிர்த்து சிங்கள எதிர்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியிருக்கும் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் இருக்கின்ற இரண்டு வேட்பாளரையும், ஈழத்தமிழருக்கு எதிரான போருக்கு காரணமானவர்கள் என்பதாக கூறிக்கொண்டு, போர் எதிர்ப்பாளர்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்ற பரப்புரையை செய்து வரக்கூடிய பிற வேட்பாளர்களில் முக்கியமானவர்கள், இடது முன்னணியைச் சேர்ந்த டாக்டர் விக்கிரம பாகு கருணா ரத்னேயும், இந்நாள் எம்.பி. சிவாஜி லிங்கமும், இன்னொரு இடதுசாரி தலைவர் ஜெயசூர்யாவும் வருகிறார்கள். இவர்களில் முதல் இருவர் இணைந்து பிரச்சாரத்தில் வேறு ஈடுபட்டு வருகிறார்கள். மகிந்தாவை எதிர்க்கக்கூடிய பொன்சேகா பல்வேறு தளங்களில், வாக்கு சேகரிக்க முயன்று வருகிறார். அதில் ஒன்று ஈழத்தமிழர்களில் வாக்குகளை வென்றெடுப்பது. அதற்காக போரில் நடந்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துகின்ற வேலைகளை அவர் தொடங்கி விட்டார். அதன் மூலம் அவருக்கு செல்வாக்கும் கூடி வருகிறது. தென்னிலங்கையில் இருக்கின்ற மலையகத் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும், கொழும்பு வாழ் தமிழர் மத்தியிலும், மகிந்தா அரசாங்கத்திற்கு செல்வாக்கு குறைந்து வருவது கண்கூடு. உதாரணமாக மகிந்தா அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற சிலோன் தொழிலாளர் காங்கிரசின் தலைவரான ஆறுமுகத் தொண்டைமான் கட்சியும், இன்னொரு அமைச்சரான மலையக மக்கள் முன்னணியின் தலைவராக இருக்கும் சந்திரசேகரன் கட்சியும், சமீபத்திய மாநில கவுன்சில்களின் தேர்தல்களில் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றன. ஆனால் அதே மாநிலக் கவுன்சில்களின் தேர்தல்களில், கொழும்பு எம்.பி. மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி, வாக்குகளை அதிகமான அளவில் பெற்றது. இந்தக் கட்சி இலங்கையின் எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் இருக்கிறது. மேற்கண்ட வாக்கு எண்ணிக்கைகளை கணக்கெடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியதே, அதிபர் ராஜபக்சேதான். ஏனென்றால் எல்லா மாநில கவுன்சில்களுக்கும், தேர்தல்களை நடத்தி, ஒவ்வொன்றிலும் தனது கட்சி அல்லது தனது கட்சியின் கூட்டணி அதிகமான வாக்குகளை பெற்றதாக பெருமை அடித்துக் கொண்டு, அதனால் மட்டுமே தான் நாடுதழுவிய பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான ஆதரவு தளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துக் கொண்டிருந்த காரணத்தினால், இத்தகைய கணக்குப்பார்த்தல் தேவைப்படுகிறது. அதிபர் தேர்தலுக்கான முக்கிய இரண்டு வேட்பாளர்களில், பொன்சேகாவிற்கு ஆதரவு கூடிக்கொண்டிருப்பதாக, மகிந்தாவின் ஆதரவு ஏடுகளே எழுதத்தொடங்கிவிட்டன. பயங்கர வாதத்தை எதிர்த்து போர் நடத்த வேண்டும் .அந்தப் போரில் வெல்ல வேண்டும் என்று கருதுகின்ற சிங்கள மக்கள், அதற்காக வாக்களிக்க விரும்பினால் மகிந்தாவை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் களத்தில் பொன்சேகாவை நிறுத்தி, அதன்மூலம் தான் மகிந்தா அந்தப் போரில் வென்றதாக, மார்தட்டிக் கொள்கிறார். அதனால் சிங்கள மக்களை பொறுத்தவரை, போர் வெற்றிக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் இருவரையுமே பார்க்கிறார்கள். அதனால் அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக, ஒருவருக்கு வாக்களிப்பார்கள் என்று யாரும் கூறமுடியாது. இதிலும் கூட மகிந்தா தனது ஒரே நம்பிக்கை வாக்கான, போர் ஆதரவு வாக்குகளை பெறுகின்ற உத்தரவாதத்தை இழந்து நிற்கின்றார். வெள்ளை வாகன கடத்தல்களும், அதையொட்டிய படுகொலைகளும், கொழும்பு நகரத்தையும், ஈழத்தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரையும், நேரடியாக பாதித்து வரும் நிகழ்வுகள். தங்கள் குடும்பத்திலோ, தங்களுக்கு வேண்டிய குடும்பத்திலோ அல்லது தங்களுக்கு தெரிந்த குடும்பத்திலோ ஒருவர் வெள்ளை வாகனத்தால் கடத்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி, அந்த மக்களை பெரும் பாதிப்புக் குள்ளாக்கியிருக்கிறது. வாய்திறந்து கூறமுடியா விட்டாலும், ஊரறிந்த உண்மையாக கோத்தபாய ராஜபக்சேதான் அந்த வெள்ளை வாகன கடத்தல்களுக்கு, பின்னணியில் இருந்து செயல்படுபவர் அல்லது செயல்பட்டவர் என்பதாக அவர்கள் எண்ணிப்பார்க்கிறார்கள். இதுவும் கூட மகிந்தாவிற்கு எதிராக வாக்குகளை தள்ளிவிடக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. 4,000 பேர்கள் வரை வெள்ளைவாகன கடத்தலால் தூக்கிக் கொண்டு செல்லப்பட்டி ருக்கிறார்கள் என்ற செய்தி மனிதாபிமானமுள்ள யாரையும் அசைத்துப்பார்க்கிறது. அதே போல வெள்ளைக் கொடிகளுடன் வன்னிப் போரில் இறுதிக்கட்டத்தில், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிப்படைத் தலைவர்கள் பலரையும் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை, கோத்தபாய ராஜபக்சே அனுப்பினார் என்று பொன்சேகா வெளியிட்ட செய்தி, அங்கே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பெயரில், பொன்சேகா தனது கூற்றை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், அவரை ஆதரித்து பரப்புரை செய்யும் பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே அந்த பிரச்சனையை முக்கியமாக பரப்பி வருகிறார். அதனால் அது மக்களுடைய கவனத்திலிருந்து பிறழமுடியாது. சரணடைந்த எந்தப் போராளியையும் சுட்டுக் கொல்வதை, சிங்கள மக்களும் கூட அங்கீகரிக்கமாட்டார்கள். இதுவும் கூட வாக்கு எண்ணிக்கையை பாதிக்கக்கூடிய செய்திதான். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் ஒரே முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். சிவாஜி லிங்கம் இன்றைய நிலையில் அவர்களிடமிருந்து வேறுபட்டாலும், தமிழ் பேசும் மக்கள் அனைவரும், தமிழ் தேச கூட்டமைப்பின் முடிவுகளை எதிர்பார்த்து நிற்கிறார்கள். பொன்சேகா அணியினருடன் பேசுவது ஒன்றைத்தான் முதன்மையாக தமிழ் தேச கூட்டமைப்பினரும் முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றி பெறுமானால், பொன்சேகா அவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுப்பாரானால், பெருவாரியான அல்லது ஒட்டுமொத்த ஈழத்தமிழர் வாக்குகள், மகிந்தாவிற்கு எதிராக விழும் என்பதில் சந்தேகம் இல்லை. டக்ளஸ் தேவானந்தா என்ற இன்றைய அமைச்சரும், கிழக்கு மாகாண முதல்வருமான பிள்ளையனும், நாடாளுமன்ற நியமன உறுப்பினரான கருணாவும், பதவி பொறுப்புகளில் இல்லாமலேயே கொழும்பில் அமர்ந்து கொண்டு மகிந்தா வேட்புமனுவை ஆதரிக்கின்ற பிளாட் தலைவர் சித்தார்த்தனும், பெருவாரியான தமிழர் வாக்குகளை தங்கள் வேட்பாளர் மகிந்தாவிற்கு ஆதரவாக திருப்புவது இயலாத காரியம். வவுனியாவில் இருக்கின்ற கணிசமான பிளாட் வாக்குகள், இந்த முறை சித்தார்த்தன் கூற்றுக்கு ஏற்ப மகிந்தாவிற்கு விழும் என்று உத்தரவாதம் சொல்ல இயலாது. முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் காலத்திய பிளாட் அமைப்பும், மாணிக்க வாசன் காலத்திய பிளாட் அமைப்பும், சித்தார்த்தன் கூற்றை கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆகவே தமிழர் வாக்குகள் நிச்சயமாக மகிந்தாவிற்கு எதிராகத்தான் திரும்பும். அதே சமயம் தமிழ் பேசும் முஸ்லிம்களை மீண்டும் யாழ்பாணத்தில் கொண்டு வந்து குடியேற்றுவேன் என்ற திடீர் வசனத்தை மகிந்தா அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் பேசும் முஸ்லிகளது வாக்குகளை ஈர்க்கலாம் என்று அவர் எண்ணினால், அடுத்த நாளே திரிகோண மலை மாவட்டத்தில், முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றிக் கொண்டிருக்கும் அரசின் திட்டங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. ஆகவே முஸ்லிம் வாக்குகளை ஈர்ப்பது என்பதிலும் கூட, மகிந்தாவிற்கு உறுதியில்லை. இத்தகைய சூழலில்தான், மகிந்தா தனது பீதியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முக்கியப் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்ட ராணுவத்தளபதியே தனக்கு எதிராக போய் விட்டார் என்றும், அதனால் நாடே அழியப்போகிறது என்றும் தேர்தல் கணிப்பை முன்கூட்டியே உணர்ந்து புலம்பியுள்ளார். இப்படித்தானே பிரபாகரனிடமிருந்து, கருணாவை பிரித்த ஆட்சியாளர்கள் சதி இப்போது சிங்களர் மத்தியிலேயே நடப்பதனால் திருப்பி அடிக்கிறது என்று கேட்பவர்களும் உண்டு.இந்த நேரத்தில் தேசிய சமாதான கவுன்சில் ஒரு செய்தியை அசை போடுகிறது. அதாவது அதிபர் ஆட்சியை கலைத்துவிட்டு, நாடாளுமன்றப் பாதையில் பிரதமர் ஆட்சியை கொண்டு வருவோம் என சூளுரைக்கும் பொன்சேகா கருத்து எடுபடும் நிலைமையில், இந்த அதிபர் தேர்தல் ஒரு முதிர்ச்சியற்ற பரிசோதனை என்று அது கூறுகிறது. ஆகவே இப்போதும் கூட காலம் இருக்கிறது என்றும், அதிபர் தேர்தலை ரத்து செய்து விட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நாடு திரும்பலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஜனநாயக பார்வையுடன் அதிபர் ஆட்சியையே ரத்து செய்வதும், அதிபர் தேர்தலை நடத்தாமல் இருப்பதும் செய்யலாமே என்று இலங்கை அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருக்கும் இந்திய அரசை நாம் கேட்கலாம்.

Monday, December 28, 2009

காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டிலாவது, ஊழல் ஒழிப்பில் சீனாவை, இந்தியா பின்பற்றுமா?

அண்டை நாடுகளாக இருந்தாலும், ஒரே எல்லைக்கோடுதான் இரண்டு நாடுகளுக்கும் என்று சொன்னாலும், ஆசியா கண்டத்திற்குள்ளே இருக்கும் இந்தியாவும், சீனாவும் தங்களுக்குள் நல்லுறவை வளர்த்துக் கொள்வதில் பலவீனமாகவே இருந்தன. உலக அரங்கில் இருக்கின்ற நாடுகள் எல்லாம் இணைந்து, அகில அளவில் வளர்ந்து வரும் பருவநிலை மாற்ற ஆபத்தையும், பூமி வெப்பமடையும் அபாயத்தையும் எதிர்கொள்வதற்காக டென்மார்க்கில் கூடினர். டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்ஹெகன் நகரில் கூடிய அந்த ஐ.நா. சபையின் ஏற்பாடான மாநாட்டில், வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்தை உணர்ந்தனர். வேறுவழியே இல்லாமல் இந்த இரு நாடுகளும், அந்த மாநாட்டின் 12 நாட்களும், இணைந்தே செயல்படும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊர் திரும்பினால், எல்லைப் பிரச்சினையில் ஒருவரையொருவர் கடித்துக் கொள்வார்கள் என்ற நிலைமையிலும் கூட, நல்ல விசயத்திற்காக கோபன்ஹெகனில் கூடிப் பேசி, குலாவிக்கொண்டார்கள் என்பது நல்ல செய்திதான். அதே போல மக்கள் சீன அராசங்கம் புதிதாக தொடங்கியிருக்கின்ற ஒரு இயக்கத்தை, இந்திய அரசாங்கமும் பின்பற்றுவார்களா என்று நமக்கு கேட்கத் தோன்றுகிறது. அதுதான் ஊழல் எதிர்ப்பு இயக்கம். கடந்த டிசம்பர் 26ம் நாள், மக்கள் சீன குடியரசின் முதல் தலைவராக இருந்த மாசேதுங் பிறந்த நாளன்று, ஒரு நல்ல காரியத்தை அந்த அரசாங்கம் முன் வைத்துள்ளது. அந்த நாளை ஊழல் எதிர்ப்பு நாளாக அவர்கள் கடைபிடிக்க அறிவித்தார்கள்.அதையொட்டி ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று ஒன்றையும் கட்டவிழ்த்து விட்டார்கள். 2008ம் ஆண்டுக்குள் ஊழல் செய்த அதிகாரிகள் என்று பட்டியலிடப்பட்டு, சீன நாடெங்கிலும் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,960. இத்தகைய நிகழ்வை முன்னுதராணமாக இந்திய அரசும், பின்பற்றலாமே என்ற ஒரு நப்பாசை நமக்கு ஏற்படுகிறது. ஏனென்றால் மக்கள் சீன குடியரசு என்று அழைக்கப்படும் சீனநாட்டினுடைய அரசாங்கத்தை, சீன நாடு 1949ல் விடுதலையான பிற்பாடு வழிகாட்டி, தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பது சீன கம்யூனிஸ்ட் கட்சி. அப்படிப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்தப்படும் அரசாங்கத்திலேயே, ஊழல் நடப்பது என்பதும், அதை கண்டுபிடித்து அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்பதும், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்றைய உலக விதி. இந்திய அரசாங்கம், நாட்டு விடுதலைக்கு பிறகு 61 ஆண்டுகளாக, இடையில் சில ஆண்டுகள் விடுபட்டாலும், தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் என்ற காங்கிரஸ் கட்சியால் ஆளப்பட்டுவருகிறது. அந்த காங்கிரஸ் கட்சி இன்று தனது 125வது வயதை எட்டுகிறது. 1885ம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள், இன்றைய மும்பையில், அன்றைய பம்பாயில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. ஏ.ஓ.ஹியூம் என்ற ஆங்கிலேயரால் அப்போது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருடைய ஆட்சியிலேயே அந்தக் கட்சி துவங்கப்பட்டதால், இன்று வரை அதனுடைய துவக்கம் பற்றிய அல்லது துவக்கத்திற்கான நோக்கம் பற்றிய விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாட்டு விடுதலைக்குப் பிறகு சீன நாட்டை ஆண்டுவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாட்டு விடுதலைக்குப் பிறகு இந்திய நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கின்ற ஒத்த விசயங்களையும், வேறுபாடுகளையும் நாம் ஒப்பிட்டு இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட கேள்வியை எழுப்பவேண்டியிருக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சி தனது 125வது ஆண்டிற்குள் நுழையும் நாள் என்பதனால், குறைந்த பட்சம் ஊழல் எதிர்ப்பிலாவது அண்டைய நாட்டின் அனுபவங்களை பின்பற்றுவார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறோம். காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றில், அந்த கட்சியின் தலைமையும், தொண்டர்களும் சுதந்திரத்திற்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு காலகட்டம் உண்டு. அப்படிப்பட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளை சேர்ந்த, பல்வேறு சாதிகளை சேர்ந்த, பல்வேறு மதங்களை சேர்ந்த மக்களை எல்லாம் ஓரணியில் திரட்டி, இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற நல்லதொரு கொள்கையை முன்வைத்து தனது கட்சியின் தலைமையில், ஒரு இயக்கத்தை நாட்டின் இயக்கமாக நடத்தி வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலேயர் ஒருவரால் தொடங்கப்பட்ட ஒரு கட்சியாக இருந்தாலும், ஆங்கிலேயர் வழிகாட்டலில் ஒரு நாடாளுமன்றத்தை பயிற்சிக்காக உருவாக்கி, அதை ஜவஹர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் கரங்களில் கொடுத்த வரலாறு ஒரு புறம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களுடைய நேரடி ஆட்சியை இந்தியாவிலிருந்து விரட்டி அடிப்பதற்காக, ஒரு மாபெரும் ஐக்கிய முன்னணியை கட்டி எழுப்பியது என்ற செய்தியை நாம் மறுப்பதற்கில்லை.ஆட்சி அதிகாரம் தங்கள் கரங்களில் வந்த பிற்பாடு, காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டில் ஊழலும், லஞ்சமும் எந்த அளவுக்கு உள்ளே புகுந்தது என்பதையும் இந்த 125 ஆண்டு வரலாற்றைக் கண்டு பெருமைப்படக்கூடிய நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 5 ஆண்டு திட்டங்களையும், பொதுத்துறைகளையும் வளர்த்து நாட்டினுடைய உள்கட்டுமான ஏற்பாடுகளை உருவாக்கிய காங்கிரஸ் கட்சித் தலைமை, பிற்காலத்தில் ஒவ்வொரு தனியார் துறையிலிருந்தும் எந்தளவுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு, நாட்டின் முக்கியமான ஆலைகளையும், திட்டங்களையும் தாரை வார்த்தார்கள் என்ற சிதைவுகளை நாம் கணக்குப்பார்க்கவேண்டிய தருணம் இது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனத்தை உருவாக்குவதற்காக, பெரியதொரு புரட்சியை நடத்தியது. அத்தகைய புரட்சியை நடத்துவதற்கான மக்கள் படையை உருவாக்கி, அந்த இயக்கப்போக்கில் பல்வேறு தோழர்களின் உயிர் தியாகங்களைச் செய்து அதன் மீதே தங்கள் நாட்டின் மக்கள் குடியரசை கட்டி எழுப்பியது. அப்படிப்பட்ட சீன நாட்டில் இன்றைக்கு பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற அரசாங்க பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள், ஊழல் செய்தவர்களாக அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை விசாரணை செய்து, தண்டிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது என்றால், எத்தனை உருக்கு போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்ற ஒரு கட்சியிலும், அந்த கட்சியில் தலைமையிலான அரசாங்கத்திலும், இப்படிப்பட்ட ஊழல் புகார்கள் வரமுடிகிறது என்று சொன்னால், ஒரு நாட்டின் உள்ளே இருக்கின்ற ஆட்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் மட்டுமே இத்தகைய பிரச்சினைகளுக்கு ஒட்டு மொத்த காரணமாக இருக்க முடியாது என்பது தெரிகிறது. அப்படியானால் வெளியே இருக்கும் காரணிகள் என்ன? இன்றைய உலகச் சூழலில் ஒரு நாடு தனது நிலத்தில் உற்பத்தியாகின்ற உற்பத்திப் பொருட்களை மட்டுமே சார்ந்து வாழ முடியாது என்ற நிலைமை இருக்கிறது. உணவுப் பொருட்கள் தொடங்கி, அத்தியாவசிய தேவைப்பொருட்கள், ஆடம்பர தேவைப்பொருட்கள், வாழ்வதற்கான பல்வேறு வகையான பொருட்கள் ஆகியவற்றை நாடுவதற்காக, எந்த ஒரு நாடும் உலக சந்தையை அணுகவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட உலக சந்தையில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட, தனியார் முதலாளிகள் தாராளமாக உலா வருவதை யாரும் தடுத்து விடமுடியாது. அப்படிப்பட்ட தனியார் முதலாளிகள் தங்களது சரக்குகளை விற்பனை செய்வதற்காக, கையூட்டுகள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வழக்கத்தை பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், தங்களது நிர்வாகத் தலைமையிலேயே ஒரு தனிப்பிரிவாக ஒதுக்கி, ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திலும் தீர்மானிக்கும் பொறுப்பிலிருக்கின்ற அதிகாரிகளின் பலவீனங்களை பட்டியல் போட்டு, அவர்களுக்காக பல கோடிகளை செலவு செய்யுமளவுக்கு ஒரு நடைமுறையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை அவர்களது மொழியில் வர்த்தகத் திறமை என்பதாக கூறுகிறார்கள். இத்தகைய வர்த்தகத் திறமையில் அல்லது வர்த்தக சூதாட்டத்தில், சிக்கிக் கொண்ட அரசாங்க அதிகாரிகள் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியாலும், சீன அரசாங்கத்தாலும், சீன நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள்.நமது நாடு இதுபோன்ற பாதிப்புகளால் அதிகமாக சிக்கல்களை சந்தித்திருக்கிறது. நேருவின் குடும்பத்தினர் தங்கள் தலைமையை மீண்டும், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மீதும், இந்திய அரசாங்கத்தின் மீதும் நிறுவிக்கொண்ட காலம்தான் இந்த நாட்டின் வரலாறு என்றால், நாட்டின் பாதுகாப்பிற்காக விலைக்கு வாங்கக் கூடிய பீரங்கிகளிலேயே, ஊழல் நடந்ததை அம்பலப்படுத்தியதுதான் போபர்ஸ் பீரங்கி ஊழல். இப்படி ஊழல் எலும்புக்கூடுகளை தனது பதக்கமாக வைத்திருக்கின்ற காங்கிரஸ் கட்சி, தனது 125வது ஆண்டு பிறந்த நாளிலாவது, ஊழல் எதிர்ப்பு என்பதை ஒரு சூளுரையாக அறிவிப்பார்களா என்று இந்த நாளில் நாமும் கேட்க விரும்புகிறோம்.

Sunday, December 27, 2009

சுனாமி பேரழிவும், மீனவ மக்களும்...!

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் அதிகாலை அது நிகழ்ந்தது. முதலில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் கடலிலிருந்து பேரலைகள், கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. கடலோரம் வாழ் மீனவ மக்கள் அனைவரும் அடித்துப் புரண்டு கொண்டு, ஓடி வந்தனர். கரையில் ஓடிவந்த பேரலைகள், பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி விட்டு, அமைதியாக கடலுக்குள் தங்கள் கரங்களை இழுத்துக் கொண்டன. அந்த இடைநேரத்தில் ஏற்பட்ட சேதங்கள் தான் பட்டியல் போடப்பட்டன. காட்சி ஊடகங்களில் கடல் சீற்றம் என்று முதலிலும், தண்ணீர் நகருக்குள் வந்தது எனவும் கூறியவர்கள் சுனாமி பேரலை என்ற பெயரை எழுதிக்காட்டினர். அந்தப் பெயர் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் ஊடகங்களுக்கும் கூட புதிய பெயராக இருந்தது. இந்தோனேஷியாவிலும், ஜப்பானிலும் இப்படி சுனாமி பேரலை திடீரென வருவதும், அது பெரும் சேதங்களை ஏற்படுத்துவதும், பலர் உயிர்களை பறித்துக் கொண்டு செல்வதும், அடிக்கடி நிகழும் நிகழ்ச்சிகள். அதனாலேயே அங்கெல்லாம் அட்டை வீடுகளை, மர வீடுகளை கட்டிக்கொள்வதில் கடலோரத்தில் வாழும் மக்கள் பழக்கப்பட்டிருந்தனர். தென்கிழக்கு ஆசியாவில் சுனாமி பேரலையின் தாக்குதல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் 2004ம் ஆண்டு கடைசியில் வந்த சுனாமி பேரழிவு இலங்கைத் தீவைத் தாக்கியது. அந்தமான் தீவைத் தாக்கியது. தமிழ்நாட்டின் மீது படையெடுத்தது. கேரள கடற்கரையையும் பதம் பார்த்தது. ஆந்திராவின் கடலோரம் வரை அதன் கரங்கள் தீண்டின. தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்புகளை நாகப்பட்டினம் மாவட்டம் எதிர்கொண்டது. அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டது கன்னியாகுமரி மாவட்டம். உயிர்ப்பலிகள் இந்த இரண்டு மாவட்டத்திலும் வரிசைக்கிரமமாக அதிகமாக இருந்தது. அதையடுத்து கடலூர் மாவட்டமும் திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தென் சென்னை ஆகிய மாவட்டங்களும் வரிசைப்பட்டியிலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன.சுனாமி பேரழிவு நடைபெற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவையைக் கூட்டி சுனாமி பேரழிவால் மரணமடைந்த மக்களுக்கும், கடலோரம் ஏற்பட்ட சேதங்களுக்கும் உடனடியான நிவாரணப் பணிகளுக்காக, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். அதே போல அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும், உடனடியாக ஹெலிகாப்டரில் சுனாமி பாதிப்பு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தச் சொன்னார். அதேபோல உலக அரங்கில் மேற்கத்திய நாடுகளில் இருக்கின்ற நிதி நிறுவனங்கள் கூட, தங்களது உயர்தொழில் நுட்ப வாய்ப்புகளிலிருந்து, சுனாமி பேரழிவின் பாதிப்புகள் நிகழ்ந்த இடங்களை அடையாளம் கண்டு, தங்கள் தொடர்பிலிருக்கின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, உடனடியாக கடலோரம் சென்று நிவாரண உதவிகளை செய்யுமாறு பணித்தன. நிதிநிறுவன தலைமைகளே நேரடியாக நிவாரணப்பணி செய்யக்கோரியதால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இருமடங்கு அக்கறையோடு கடற்கரை ஓரங்களை நோக்கி ஓடிவந்தன. நேற்று வரை கடலோர மக்களது வாழ்நிலைபற்றி நேரடியான அனுபவங்கள் இல்லாத, தொண்டு நிறுவனங்கள் இப்போது கடலோரத்தை நோக்கி விரைந்து வந்தன. தங்கள் கவனத்தை எல்லாம் நிலத்தில் வாழும் தலித் பிரச்சினைக்கும், பெண்கள் பிரச்சினைக்கும், குழந்தைகள் உரிமைகளுக்கும் மட்டுமே, வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, பணிசெய்து வந்த தொண்டு நிறுவனங்கள் கூட, முதன் முறையாக கடலோரம் வந்து, மீனவக் குப்பங்களை எட்டிப்பார்த்தனர். நிவாரணப் பணியாக உணவுப் பொட்டலங்கள், பழைய துணிகள் ஆகியவற்றை மீனவ குப்பங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அடுத்த நேர உணவுக்கே வழியில்லாமல், தங்களது படகுகளையும், வலைகளையும், வீடுகளையும் இழந்து தவிக்கும் மீனவ மக்களுக்கு, உடனடித் தேவையான உணவு இந்த தொண்டு நிறுவனங்களின் சேவை காரணமாக வந்து சேர்ந்தது. அதே சமயம் தங்கள் சொந்தக்கால்களில் நின்று மட்டுமே, வாழ்ந்து வந்த மீனவ மக்களுக்கு பழைய துணிகளை பயன்படுத்த மனது தயாரில்லை. கடலுக்கு சென்று நேரடியாக மீன்கள் பிடித்து, கொண்டு வந்து விற்பனை செய்வதில், மட்டுமே தங்கள் வாழ்க்கையை நடத்திய, பாரம்பரிய மீனவ மக்கள் சில பண்பாட்டு பழக்கங்களை, தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தனர். அதாவது தங்களது வாழ்க்கைக்காக யாரையுமே சார்ந்து நிற்காத ஒரு பண்பு அவர்களது உற்பத்தி உறவின் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட தன்மையே அவர்களை தங்கள் அடிப்படை தேவைக்களுக்காக, பிறரை எதிர்பார்க்கும் தன்மையிலிருந்து விலக்கி வைத்திருந்தது. ஆனால் வயிற்றுப்பசி முதல் சில நாட்களுக்கு நிவாரண உதவி செய்யவரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்து, மீனவர்களை நிற்க வைத்தது. ஆனாலும் பழம் துணிகள் என்ற விசயத்தில் மீனவ மக்களால் சமரசமாக முடியவில்லை. ஆட்சியாளர்களும், தொண்டு நிறுவனங்களும் கடலோரம் நோக்கி ஓடி வந்த முதல் இரண்டு நாட்களும், இந்த பேரழிவு அதிகாரிகளை குறிப்பாக மீன்வளத்துறை அதிகாரிகளை, கடற்கரையை நோக்கி இழுத்து வர தவறிவிட்டது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுப்பு என்பதால் அதிகாரிகள் திரும்பிப்பார்க்கவில்லை என்று எண்ணமுடிந்தது. ஆனால் மறுநாள் திங்கட்கிழமையும் கூட, அரசு அதிகாரிகள் மீனவக்குப்பங்கள் நோக்கி படை எடுக்கவில்லை. மீன்வளத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கூட, மீனவச் சமூகத்திலிருந்து வந்திருக்கவில்லை. பாரம்பரிய மீனவச்சமூகம், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும், பட்டம் பெற வைப்பதிலும், உயர்கல்வி கொடுப்பதிலும் இன்னமும் முன்னேறாத நிலைமையே நீடிக்கிறது. அதனால் அவர்களுடைய சமூகத்திலிருந்து, அரசு ஊழியர்கள் பணிக்கு ஆட்கள் வருவது அரிதான நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த சூழலில் மீன்வளத்துறையில் எப்படி மீனவச் சமூக பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்? மீனவரல்லாத சமூகத்திலிருந்து அரசு ஊழியர்களாக உருவானவர்கள் தான், மீன்வளத்துறை அலுவலகத்திலும் காணப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடலோர மீனவர்களின் தேவைகளையும், வாழ்க்கையையும், அன்றாட பிரச்சினைகளையும், வழமையாக பருவமாற்றங்களில் எழுகின்ற சிக்கல்களையும், எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார்கள் அல்லது உணர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. நடந்து முடிந்த சுனாமி பேரழிவின் விளைவுகளை உடனடியாக உணர்ந்து கொள்வதில், இத்தகைய அதிகாரிகளும், ஊழியர்களும் தேவையான சுறுசுறுப்பைக் காட்டவில்லை என்ற செய்தியே மேற்கண்ட உண்மையை பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செய்யப்பட்ட மறுவாழ்வு பணிகளை அறிவதற்கு, காஞ்சி மாவட்ட சூழலை மட்டும் எடுத்து பார்க்கலாம். காஞ்சி மாவட்டத்தில் கரிக்காட்டுக் குப்பம், உய்யாலிக்குப்பம் ஆகிய இடங்களில் அதிகமான வீடுகள் சேதமும், மரணங்களும் நிகழ்ந்தன. இழந்த படகுகளுக்கும், மீன்பிடி வலைகளுக்கும், மாற்றாக தொண்டு நிறுவனங்கள் நூற்றுக்கணக்காண படகுகளையும், வலைகளையும் அளித்தனர். கோடிக்கணக்கான நிதி தொண்டு நிறுவனங்கள் மூலம் உருண்டோடியதால், அதிகமான அளவு படகுகளை செய்து அதிக நிதியை பெறுவதற்கு விரும்பிய நிறுவனங்கள், கண்ணாடி இழைப்படகுகளை பெரும் எண்ணிக்கையில் இறக்கினர். அதில் பல கடலுக்குள் எடுத்துச் செல்வதற்கே பயன்படாமல் கரையில் நிற்கின்றன. இந்த நிலைமை கரிக்காட்டுக்குப்பம் கடலூர், நெம்மேலி, கடப்பாக்கம், கோவளம், கானத்தூர் ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தமுடியாமல் போடப்பட்டுள்ள படகுகளின் எண்ணிக்கையின் மூலம் தெரியவரும். இப்படியாக மீனவர்களுக்கு வந்தடைந்ததை விட, உதவி செய்ய வந்த அரசு உட்பட்ட நிறுவனங்களுக்கு கிடைத்த தொகை அதிகமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதிலும், காஞ்சி மாவட்டத்திலிருக்கும் 44 குப்பங்களில், 32 குப்பங்களிலிருக்கும் மக்களுக்கு தொண்டு நிறுவனங்களே கட்டிக்கொடுத்துள்ளன. அராசங்கம் மீதமுள்ள ஊர்களுக்குத்தான் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. அராசங்கத்திடம் நிலுவையிலிருக்கும், சுனாமி நிதி சில ஆயிரம் கோடிகள் வரை வெளிப்படையான கணக்கு இல்லாமல் இன்று வரை இருந்து வருகிறது. பாரம்பரிய மீனவ மக்களுக்கு ஏன் இன்னமும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும் போய்ச் சேரவில்லை என்பது விவாதிக்கப்படவேண்டும். ஒரு உண்மை இதன் மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. நிலம்சார் உலகம் என்பது வேறு. கடல்சார் உலகம் என்பது வேறு. நிலம்சார் உலகத்தை சேர்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகயியலாளர்கள் ஆகியோருக்கு இயல்பாகவே கடல்சார் உலக மக்களைப்பற்றியும், நிலமைப் பற்றியும் அறிதல் இருப்பதில்லை. நிலம் சார் உலக பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அமர்ந்து கொண்டு, கடல்சார் உலகத்தினர் பற்றிய திட்டங்களை தீட்ட முடியாது. நிலம்சார் உலகத்தின் அதிகாரிகள், கடல்சார் உலகத்தின் நலனுக்காக சிந்திக்க வாய்ப்பில்லை. இத்தகைய சூழலினால் கடல்சார் உலகை சார்ந்த, பாரம்பரிய மீனவர்களான கடல்சார் பழங்குடிமக்கள், அரசாங்க செயல்பாடுகளில் ஓரங்கட்டப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆகவே பழங்குடியினர் பட்டியலில் எப்போது பாரம்பரிய மீனவர்கள் சேர்க்கப்படுகிறார்களோ, அப்போதுதான் அவர்களுக்கே உரிய கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை கிடைக்கமுடியும். ஆகவே உடனடியாக பாரம்பரிய மீனவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய அரசு முயலுமா? என்று நாமும் கேட்க வேண்டியுள்ளது.

Saturday, December 26, 2009

சீனத்தலைவர் மாசேதுங், உலகத் தலைவரானது எப்படி?

இன்று இந்திய அரசையும், இந்தியாவின் மையப்பகுதியான மாநிலங்களையும், குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உலுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், அது மாவோயிஸ்டு இயக்கம் என்பதாக சிறுபிள்ளையும் கூறும். அதே போல அருகே இருக்கும் நேபாள நாட்டில், மன்னராட்சியை தூக்கி எறிந்து, மக்களாட்சியை நிறுவிய இயக்கத்தின் பெயரென்ன என்றால், மாவோயிஸ்டு கட்சி என்பதாக அனைவரும் கூறுவர். இன்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேபாளம் சென்று அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்து ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்காக சென்றிருக்கிறார் என்றால், யாரைச் சந்தித்து சுமூகமான தீர்ப்பை ஏற்படுத்துவார் என்ற கேள்விக்கு, நேபாள மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் பிரச்சந்தாவை சந்தித்து பேச இருக்கிறார் என்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. அப்படி இந்தியாவையும், நேபாளத்தையும் செல்வாக்கு செலுத்தும் இந்த மாவோயிஸ்டுகள் என்ற பெயர், மாவோ என்ற சீனத்தலைவரின் பெயரிலிருந்து வந்திருக்கிறது. மாசேதுங் என்ற அந்த சீனத்தலைவர் மாவோ என்று அழைக்கப்படுகிறார். இவரது பெயர் ஏன் இந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த வேண்டும்? அப்படி இவர் சாதித்தது என்ன? இதுபோன்ற கேள்விகள் இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினருக்கு எழுவது இயல்பு. இன்று டிசம்பர் 26ம் நாள், மாவோ பிறந்தநாள். 1893ம் ஆண்டு இதே நாளில் சாவோசன் என்ற ஊரில், ஹூனான் மாநிலத்தில், சீனாவில் மாசேதுங் பிறந்தார். தனது ஆரம்பப் பள்ளியிலேயே, பாரம்பரிய கன்புயூசியஸ் கருத்துக்களை கற்றார். அவரது தயார் பௌத்த மதத்தை சேர்ந்தவர். அதன் பிறகு அந்த நாட்டின் குடியரசுப் படையில் போர் வீரனாக பணியாற்றினார். மாநில நூலகத்தில் 6 மாதங்கள் படித்தார். ஹூனான் பகுதியிலிருந்தே பட்டம் பெற்றார். பிறகு தலைநகர் பீகிங் சென்றார். அங்குள்ள நூல் நிலையத்தில், உதவியாளராக பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் புரட்சிகர அறிவு ஜீவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சீன கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்கள். 1919ம் ஆண்டு ஹூனான் பகுதிக்கு திரும்பினார். அங்கு அரசியல் பணிகளில் ஈடுபட்டார். தானே ஒரு குழுவை உருவாக்கினார். அதன் மூலம் ஒரு அரசியல் இதழை வெளியிட்டார். 1920ம் ஆண்டு தனது பேராசிரியரான யாங் என்பவரின் மகளான யாங் கைஹியூ என்ற சக மாணவியை திருமணம் செய்தார். 1930ம் ஆண்டு, சீனாவை அப்போது ஆண்டு வந்த கொமின்டாங் என்ற தேசிய படையால், கைஹியூ அவரது மகன் அனையிங்கும் கைது செய்யப்பட்டு கைஹியூ படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு மாவோ, யாங் சிங்கிலிருந்து வந்திருந்த தனது சக பணியாளரான 17 வயது பெண் ஹிசிசன் என்பவரை மணமுடித்தார். 1937ம் ஆண்டு அவர்களது மணம் முறிந்தது. பிறகு அவர் சியாங்சிங் என்ற பண்பாட்டுக் கலைஞரை, மணம் முடித்தார். தனது 27வது வயதில், ஷாங்காய் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் பங்கு கொண்டார். இரண்டே ஆண்டுகளில் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு கட்சியால் ஹூனான் பிரதேசத்திற்கே அனுப்பப்பட்டார். இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் வளர்ந்த மாசேதுங், பின்னாளில் சீனப்புரட்சிக்கே தலைமை தாங்குபவராக வளர்ந்தார்.சீனா ஒரு விவசாய நாடு. அங்கே விவசாயிகள் பெரும்பான்மையாக நிலமற்ற, ஏழை விவசாயிகளாக இருந்து வந்தனர். நிலங்கள் அனைத்தும் போர் பிரபுக்கள் என்று அழைக்கப்படும் பண்ணையார்களின் ஆதிக்கங்களின் கீழ் இருந்து வந்தது. அப்போது உழைத்துக் களைத்த அந்த விவசாயிகளுக்கு மட்டும் தான், உழுதுபட்ட நிலம் சொந்தம் என்ற கொள்கையை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை முதன்மைப்படுத்தி, மாவோவும் அந்த வட்டாரத்தின் விவசாயிகளை அணி திரட்டி வந்தார். அந்த அணி திரட்டலில் ஏழை விவசாயிகளை, ஆயுதம் தாங்கிய படையாக மாவோ உருவாக்கினார். ஹூனான் பிராந்தியத்தில் மாவோ தலைமையிலான அந்தப்படை, தொழிலாளர்கள், விவசாயிகள் புரட்சிகரப்படை என்று அழைக்கப்பட்டது. மாவோவே ஒரு விவசாய குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்ததால், விவசாயிகள் மத்தியிலும், உழவர்கள் மத்தியிலும் நல்லதொரு மதிப்பு அவருக்கு இருந்தது. அதைப்பயன்படுத்தி, அந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு, மாவோ மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் தலைமை தாங்கிய அந்தப்படை ஆட்சியாளர்களது படையால் தோற்கடிக்கப்பட்டது. கடும் போருக்குப் பிறகு, மக்கள் படை சிதறடிக்கப்பட்டது. ஹூனானை விட்டு, சன்வான் பகுதிக்கு அந்தப் படைகள் நகர்ந்தன. சிதறிச்சென்ற மக்கள் படையை மாவோ மீண்டும் திரட்டி, சிறிய படையணிகளாக உருவாக்கி, ஒரு ராணுவ பிரிவையே தயார் செய்தார். அதன் தலைமையேற்க கட்சி கிளைகளை உருவாக்கினார்.படைக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அரசியல் ஆலோசகரை நியமித்தார். அவருடைய வழிகாட்டலில் படையின் செயல்பாடு இருக்கவேண்டும் என்பதை விதியாக்கினார். பகுதி, பகுதியாக இந்த முறையில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக்குழுக்கள், ஒட்டுமொத்தமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டது.மேற்கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே, எதிர்காலத்தை மாசேதுங்கின் ராணுவப்படைப்புகள் என்பது உருவாக்கப்பட்டது. அதுவே உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்ற புரட்சியாளர்களுக்கு, ராணுவ வழிகாட்டும் தத்துவமாக உருவானது. அதே போல விவசாயிகள் மத்தியில், மக்கள் இயக்கங்களை உருவாக்கியதிலும், மாவோ முன்னுதாரணங்களை படைத்திருக்கிறார். தான் முதலில் பணியாற்றிய ஹூனான் பகுதி விவசாயிகளை அணி திரட்டுவதற்காக, ஒரு விவசாயத் திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்காக போராட்டங்களை நடத்தினார். அந்த திட்டத்தில் நாளைய சூழலில் விவசாயிகளுக்கு தேவையான உடனடி கோரிக்கைகளையும், எதிர்காலத்தில் முழுமையான விடுதலையை அடைவதற்கான உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையையும் இணைத்து, விவசாய பெருங்குடி மக்கள் முன்னால் வைத்தார். இதன் மூலம் அணிதிரண்ட விவசாயிகளை விடுதலை செய்யப்பட்ட நிலங்களில் அமர்த்தினார். விவசாய முன்னோடிகளை தேர்வு செய்து, கொரில்லா குழுக்களை உருவாக்கினார். அத்தகைய கொரில்லா குழுக்கள் மூலம், பண்ணை அதிகாரங்களை தகர்த்தெறிந்து, விரட்டப்பட்ட பண்ணையார்களின் நிலங்களை, ஆயுதம் தாங்கிய விவசாயக் கொரில்லாக்களின் பாதுகாப்புடன், நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார். அத்தகைய விவசாய பொருளாதாரத்தை வழிநடத்த, புரட்சிகர மக்கள் கமிட்டிகளை, கிராமங்களில் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கொரில்லா படைகள் இணைக்கப்பட்டு, சீரான படையாக ஆயுதம் தாங்கிய மக்கள் ராணுவமாக கிராமப்புறப் பகுதிகளில் நிலை பெற்றது. அப்படிப்பட்ட பகுதிகள் விடுதலைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அனுபவங்களின் மூலம், கிராமப்புறங்களை விடுதலை செய்து, நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்யவேண்டும் என்ற புதிய தத்துவத்தை மாசேதுங் முன்வைத்தார். அதுவே பிற்காலத்தில் மாவோவின் மக்கள் போர்ப்பாதை என்பதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் விவசாய நாடுகளில், மாவோவின் வழியை பின்பற்றுவோர், இத்தகைய மக்கள் போர்ப்பாதையை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் இந்தியாவிலிருக்கும் மாவோயிஸ்டுகளும், நேபாளத்திலிருக்கும் மாவோயிஸ்டுகளும் வரிசைப்படுத்தப் படுவார்கள்.மக்கள் ஜனநாயக புரட்சி என்பதாக மாவோ, தான் நடத்திய புரட்சியின் கட்டத்தை வர்ணித்தார். அது அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகவும், பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகளின் விடுதலைக்காகவும் போராடக்கூடிய ஒரு புரட்சியின் கட்டம் என்று அவர் விவரித்ததால், அதன் மூலம் ஏற்படுத்துகின்ற அராசங்கத்தை மக்கள் ஜனநாயக அராசங்கம் என்று அழைத்தார். இது முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்ட, நிலப்புரபுத்துவ எதிர்ப்பு போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற தேசவிடுதலை போரையும் இணைத்துப் பார்ப்பதால், இதற்கு புதிய ஜனநாயக புரட்சி என்று பெயரிட்டார். அதுவே இன்று வரை பிரபலமாக இருக்கிறது. மாவோ சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 1954 முதல் 1975 வரை இருந்தார். அதே போல ராணுவ தலைமையிலும் இருந்தார். மக்கள் சீனக்குடியரசுக்கு முதல் தலைவராக செயல்பட்டார். ஆகவே அவரது பிறந்தநாள் இந்த வரலாற்று படிப்பினைகளை, நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நாள்.

Friday, December 25, 2009

கீழவெண்மணி படுகொலைகளும், படிப்பினைகளும்!

டிசம்பர் 25ம் நாள். ஏசுகிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாள் என்பதாக கடைபிடிக்கப்படும் நாள். யூத மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்காக, ஏசு நாதர் பாடுபட்டார் என்பதாக படிக்கின்றோம். அடிமைகளை விடுதலை செய்து, நல்வாழ்வை அவர்கள் எய்துவதற்காக பாடுபட்ட காரணத்தினால், ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் ஏசு நாதரை, இருபுறமும் கூடி நின்ற அடிமை மக்கள், ஆர்ப்பரித்து ஆதரவு தந்தனர். சாதி ஒடுக்கு முறையில் தவிக்கின்ற இந்தியாவிலும், ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை பெறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளில், கூடுதலான சுமையை சுமப்பவர்கள், தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அத்தகைய தலித் மக்கள் நாடெங்கிலும் விவசாயக் கூலிகளாக, நிலமற்ற, ஏழை உழவர்களாக தங்களது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட உழவர் பெருங்குடி மக்களை, பண்ணை நுகத்தடியால் அடக்கி வைத்திருக்கும் பண்ணையார்கள், சாதீய ஒடுக்கலையும், ஒரு ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தான் சாதி அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்ற, கூலி ஏழை தலித் மக்களை, மதம் மாறினால் சுதந்திரம் கிடைக்கும் என்ற வார்த்தைகள் ஈர்த்தன. அப்படி ஈர்க்கப்பட்டு மதம் மாறிய, தலித் மக்களையும் சாதித் தீண்டாமை, தீண்டாமல் விடவில்லை. மதம் மாறினாலும் இந்த நாட்டில் சாதி மாறுவதில்லை என்பதை சாதித்து வருவது நிலப்பிரபுத்துவத்தின் குணமாகயிருக்கிறது. அப்படித்தான் இதே நாளில் அந்த வெண்மணி நிகழ்ச்சி நடந்தது. இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், நேற்றைய கிழக்கு தஞ்சையாக இருந்தது. அதில் நாகப்பட்டினம் ஒரு வட்டாட்சியாக நிர்வகிக்கப்பட்டது. அதற்கு உட்பட்ட கிராமம் தான், கீழவெண்மணி கிராமம். கீழத்தஞ்சை முழுவதுமே, பெருவாரியான மக்களாக இருக்கும் தலித் மக்கள், கூலி, ஏழை விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில், பொதுவுடைமைக் கட்சி ஆண்டு பலவாக, சங்கம் அமைத்து போராடி வருகிறது. ஆரம்பத்தில் அவர்கள் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வந்தார்கள். அப்போதும் ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் கூலி மக்களை சாணிப்பால் கொண்டும், சவுக்கடி கொண்டும் அடித்து வந்தார்கள். அதை எதிர்த்துத் தான் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில், கூலி விவசாயிகளை சங்கங்கள் அமைத்து, அவர்கள் திரட்டி வந்தார்கள். சாணிப்பாலும், சவுக்கடியும், கம்யூனிஸ்ட் கட்சியால் கடுமையான போராட்டங்களின் மூலம் எதிர்க்கப்பட்டது. அப்படி வெற்றிகரமான போராட்டங்களை, பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்தி வந்த, சீனிவாசராவ் நினைவாக இப்போது அரசாங்கம் மண்டபம் கட்டியுள்ளது. வரலாற்றில் இந்த படிக்கட்டுகள் மறக்கப்பட முடியாது என்பதற்கு இதுவே உதாரணம். அப்படிப்பட்ட வட்டாரத்தில் தான், கீழவெண்மணி கிராமத்தில் இதே நாளில், அந்த சோகச் செய்தி அரங்கேறியது. கூலி உயர்வு போராட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த தலித் கூலி மக்களை திரட்டி போராடி வந்தது. கீழதஞ்சையில், குறிப்பாக நாகப்பட்டினம் வட்டாரத்தில், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில், ஆதிக்கசாதிப் பண்ணையார்கள் உருவாக்கிய அமைப்பிற்கு, கோபால கிருஷ்ணநாயுடு தலைவராக இருந்தார். அவர் தான் அந்த வட்டாரத்தின் கூலிப் போராட்டத்தை ஒடுக்குவதில் பெயர் பெற்றவர். அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக, கூலி விவசாயிகள் அங்கே ஒடுக்கப்பட்டார்கள். அறுவடை கூலியாக காசுக்கு பதில், நெல் கொடுப்பது தான் அங்கேயிருந்து வந்த பழக்கம். உச்சக்கட்டத்திற்கு போராட்டம் சென்ற போது, பண்ணையார் கோபால கிருஷ்ணன், காவல் துறையுடன் சேர்ந்து கொண்டு, கீழவெண்மணி கிராமத்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக உள்ளே நுழைகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள், அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். கூலி உயர்வு போராட்டத்தில்

Thursday, December 24, 2009

மழலையர்களை மிரட்டும் நர்சரிப் பள்ளிகள்

இன்று பள்ளி செல்லும் சிறுகுழந்தைகளை, மாணவ, மாணவியரை ஏற்றி செல்லும் வாகனங்கள், ஒவ்வொரு ஊராக கவிழ்ந்ததையும், கவிழ்ந்ததற்கான காரணமாக ஓட்டுனநர்களின் பொறுப்பற்ற தன்மையையும், ஊடகங்கள் தொடர்ந்து காண்கிறோம். கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்ற ஓட்டுநர்கள், குழந்தைப் பிள்ளைகளை வாகனத்துடன் பள்ளத்தில் விழவைத்தார்கள் என்பதால், காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அதே போல உரிமம் இல்லாத ஓட்டுநர்களை, பணிக்கு வைத்ததால் பள்ளி நிர்வாகங்கள் மீதும், கல்வித்துறை நடவடிக்கைகள் தொடர்கின்றன. விதிமுறைகள் படி நடந்து கொள்ளாத பள்ளி நிர்வாகங்களுக்கு, அனுமதி கொடுத்ததற்காக கல்வி இயக்கக அதிகாரிகளும் கேள்விக்குள்ளாகிறார்கள். ஒரு விபத்து நடந்ததை யொட்டி, அல்லது ஒரு விபத்து ஊரில் எல்லோரையும் உசுப்பி விட்டதையொட்டி, ஊடகங்களில் பெரிய அளவில் அம்பலமானதை யொட்டி, அரசாங்கமும், அதிகாரிகளும் துரித நடவடிக்கையாக சிலர் மீது குற்றம் சுமத்தலாம். ஆனால் ஒரு விபத்து இந்த நாட்டில் தன்னை அறிவித்துக் கொள்ளாமலேயே, தொடர்ந்து நடந்த வருகிறது. அந்த விபத்துதான் கல்வியை வியாபாரமாக்கிய ஒரு சமூகத்தில், மழலைப் பிள்கைளுக்கு கல்வி கொடுப்பதற்காக என்ற பெயரில், நர்சரிப் பள்ளிகளை எங்கெணும் தொடங்கியுள்ளார்கள். நர்சரிப் பள்ளிகளை தொடங்கியவர்கள் தனியார்கள் என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது. பள்ளிக் கல்வி இயக்ககம் தானே என்ற கேள்வி தானாகவே எழும். கடந்த 20 ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த நர்சரிப் பள்ளிகளின் பண்பாடு, அனைத்துதரப்பு மக்களையும் ஒரேடியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. அனைத்து நர்சரி பள்ளிகளிலும் ஆங்கிலம்தான் பயிற்று மொழி. இப்படி மழலைப் பிள்ளைகளுக்கு, தொடக்கத்திலிருந்தே ஆங்கிலக்கல்வி கொடுப்பது என்பது ஆரோக்கியமானதா? அதற்காக பிள்ளைகளின் பெற்றோர் செலவழிக்கின்ற பணம், அதிகமாக இல்லையா? ஆரம்பக்கல்வியை இப்படி தனியாருக்கும், ஆங்கில பயிற்று மொழிக்கும் தாரை வார்ப்பது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? ஆங்கில மொழி என்பது அறிவாக மாறுமா? அறிவியல் பார்வையை, தாய்மொழி தவிர எந்த மொழியின் மூலமும் கற்றுக் கொடுக்க முடியுமா? ஆங்கிலப் பயிற்று மொழி படைப்பாற்றலை ஊக்குவிக்குமா? இளம் சிறார்களுக்கு இப்படித்தான் சமூகம் வழிகாட்டுமா? இதுபோன்ற கேள்விகள் எல்லாம், எந்த ஒரு சமூகப்பார்வை உள்ளவருக்கும் ஏழவேண்டும். இந்த நேரத்தில் இந்திய நாட்டில், இயங்கிவருகின்ற நர்சரி பள்ளிகள், எப்படி காசு உருவாக்கும் இயந்திரங்களாக இருக்கின்றன என்ற புள்ளி விவரங்களை ஒரு இணையதளம் அம்பலப்படுத்தி உள்ளது. நல்ல பள்ளிகள் என்று பெயரெடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, குறைவாக இருக்கின்ற காரணத்தினால், அவற்றிலும் நூற்றுக்கணக்கான இடங்களே இருக்கின்றன என்ற நிலைமையில், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அந்த நூற்றுக்கணக்கான இடங்களுக்காக, போட்டிப்போட்டுக் கொண்டு, தனியார் கல்வி நிறுவனங்களை, கல்வியாண்டு தொடங்கும் போது, முட்டி மோதுகிறார்கள்.அந்த இணைய தள புள்ளி விவரம் கூறுகின்ற செய்திகள், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்தியாவில் உயர்கல்வியில் முன்னேறிய கல்விச்சாலையாக கருதப்படுபவை ஐ.ஐ.டி.கள். அந்த ஐ.ஐ.டி.களில் நிலவுகின்ற கல்விக் கட்டணத்தின் அளவை விட, அதிகமாக நர்சரி பள்ளிகள் வசூலிக்கின்றன என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐ.ஐ.டி. என்ற ஆராய்ச்சிக்கான கல்வியும் இணைந்த, உயர்க்கல்வி சாலைகள், மேற்கத்திய நாடுகளின் உதவிகளுடன், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு நடத்தப்படுபவை. உதாரணமாக சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனம், ஜெர்மன் நாட்டு உதவியுடன் நடத்தப்படுகிறது. இதுபோல கான்பூர் ஐ.ஐ.டி., துர்காப்பூர் ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி. போன்ற கல்விச் சாலைகளும் இந்தியாவின் உயர்கல்வியில் முக்கிய இடம் பிடித்தவை. ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்கள் இந்த கல்விச்சாலைகளில், குறிப்பாக அறிவியல் பாடங்களுக்கு பெயர் பெற்றவை. இவற்றிலிருக்கும் சோதனைச் சாலைகளும், உயர்ந்த தன்மைகளைக் கொண்டது. இந்த ஐ.ஐ.டி.க்கள், தனியான பெரிய வளாகங்களுக்குள் கட்டப்படுகின்றன. அவற்றிலிருக்கும் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உயர்ந்த தரத்தைக் கொண்டவை. இப்படிப்பட்ட ஐ.ஐ.டி.களில் கல்விக்கட்டணமாக ஆண்டிற்கு ரூ.50,000 வசூலிக்கிறார்கள். அது தவிர தங்கும் விடுதி, முன்னாள் மாணவர் சங்கம், நுழைவுக்கட்டணம் ஆகியவற்றை சேர்த்து, ஆண்டிற்கு ரூ.20,000 வசூலிக்கிறார்கள். அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் இருக்கின்ற பிரபல நர்சரி பள்ளிக்கூடத்தில் ஆண்டிற்கு ரூ.75,000 அல்லது அதற்கும் மேல் வசூலிக்கிறார்கள். அதிலும் குழந்தைகளும் பெற்றோருக்கு கடுமையான நேர்காணல்கள் நடத்தப்பட்டு, பல சோதனைகளுக்கு பிறகுதான் இத்தகைய நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். டெல்லியையொட்டியுள்ள கர்காவோன் பகுதியில் ஒரு பள்ளியில், 2009 10 கல்வி ஆண்டுக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.75,000. அது தவிர அதே பள்ளியில் மற்ற கட்டணங்கள் ஆண்டிற்கு ரூ.1,70,000 வசூலிக்கிறார்கள். இது தவிர ஆண்டு முழுவதுக்குமான போக்குவரத்து கட்டணமாக ரூ.38,000 முதல் ரூ.44,000 வரை வசூலிக்கிறார்கள். இது தவிர ஐ.டி.என்றழைக்கப் படுகின்ற, உயர்தொழில் நுட்பத்திற்காக, ஆண்டிற்கு ரூ.6,000 முதல் ரூ.9,500 வரை வசூலிக்கிறார்கள். இது ஐ.ஐ.டி. வசூல்களை விட பல மடங்கு அதிகம் என்பது கண்கூடு.டெல்லிக்கு அருகே உள்ள நொய்டா பள்ளி ஒன்றில் நுழைவு கட்டணமாக ரூ.61,000மும், காலாண்டு கட்டணமாக ரூ.26,000மும் வசூல் செய்கிறார்கள். அதே நகரில் இன்னொரு பள்ளியில் நுழைவுக்கட்டணமாக ரூ.45,000மும், காலாண்டுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.11,000மும் வசூல் செய்கிறார்கள். இதுபற்றி டெல்லி மாநிலத்தின் கல்வி அமைச்சர், அரவிந்தர் சிங் லவ்லியிடம் கேட்டதற்கு, இப்படிப்பட்ட விதிமீறல்கள், பள்ளிகளில் நடப்பது தெரியும் என்றும், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்தாலொழிய நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியுள்ளார். பெற்றோர்கள் ரசீதுகளை கொடுத்தார்கள் என்றால், அதன்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும், எந்த பெற்றோரும் அதற்கு முன்வருதில்லை என்றும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இதே புராணத்தை எந்த மாநிலத்திலும், அமைச்சர்கள் கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்விச்சாலைகளுக்கு, அனுமதி கொடுத்த கல்வி இயக்ககம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர்கள் எப்போதுமே விசாரணை வளையத்திற்கு உள்ளே வரமாட்டேன் என்கிறார்கள். அதுபற்றி கூறும்போது, டெல்லியிலிருக்கின்ற கல்வி இயக்ககமும், பள்ளிக்கல்விக்கான உயர்அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டண முறைகள் பற்றிய வழிகாட்டல்கள் மீது எந்த கருத்தும் கூற மறுக்கிறார்கள் என்பதாக அந்த இணையதளம் குற்றம்சாட்டுகிறது. நொய்டா நகரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைவுகட்டணமாக ரூ.45,700 வாங்கிக் கொண்டு, போக்குவரத்து உட்பட காலாண்டு கட்டணமாக, ரூ.11,000 கூடுதலாகப் பெற்றுக் கொண்டு, ரசீது மட்டும் ரூ.700க்கு கொடுக்கிறார்கள் என்ற ஒரு பெற்றோரின் குமுறலும் அதில் வெளியாகியுள்ளது. பெருவாரியான பள்ளிகள் இதே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன என்றும், ஒரு நர்சரி இடத்திற்கு அவர்கள் வாங்கக் கூடிய முழு கட்டணத்திற்கும், என்றைக்கும் ரசீது கொடுப்பதில்லை என்பதாக இன்னொரு பெற்றோர் முறையிடுகின்றார். பள்ளிநிர்வாத்தின் கைகளில் பெற்றோர்கள் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கல்வி இயக்ககத்தின் வழிகாட்டல்களை பின்பற்றாத பல பள்ளிகள் உள்ளன. அவை அநேகமாக, அங்கீகரிக்கப்படாத பள்ளிகளாக இருக்கின்றன. டெல்லி மாநகரில் ஏறத்தாழ 1000 அங்கீகரிக்கப்படாத பள்ளிகள் இருக்கின்றன என்றும், அவை கல்வி இயக்கத்தின் வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. 1973ம் ஆண்டின் டெல்லி கல்விச்சட்டத்தின் கீழ் அவை கொண்டு வரப்படமுடியாததால், அவற்றின் மீது கல்வி இயக்ககத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்ற நிலைமை இருக்கிறது. நொய்டாவிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் நிர்வாகம் இதுபற்றி கேட்கப்பட்ட நிலையில், உங்களுக்கு நல்ல கல்வி வேண்டுமென்றால், நீங்கள் அதிகமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்றும், உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கூடம் செலவழிக்கின்ற நிதியை ஒப்பிடும் போது, நீங்கள் கொடுக்கின்ற பணம் அதிகமானதல்ல என்றும் அவர்கள் நியாயப்படுத்தினார்கள். தங்கள் பள்ளிகள் 8 மணி நேரம் நடத்தப்படுவதாகவும், சிறந்த கலைவடிவிலான உள்கட்டுமான வசதிகள் இருப்பதாகவும், அதனால் தாங்கள் பெறுகின்ற கட்டணம் நியாயமானதே என்றும் இந்த கல்வி வியாபாரிகள் கூறுகிறார்கள். மேற்கண்ட நிலைமை டெல்லியில் மட்டும்தானா? சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும், இப்போது கிராமங்களில் கூட இத்தகைய மழலையர்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும், ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் இதே போல நடந்து கொள்ளவில்லையா? புற்றீசல் என வளர்ந்து விட்ட இந்த ஆங்கில நர்சரிப் பள்ளிகளுக்கு யார் பொறுப்பு? தாய் மொழியில் பயிற்று மொழி இல்லாமல், சிறு குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் கற்றுக்கொடுப்பது, அவர்களது சிந்தனையை தூண்டி விடுமா? வளர்க்க உதவுமா? சமச்சீர் கல்வி பற்றி பேசிவரும் நாம், முதலில் ஆரம்பக்கல்வியை ஒழுங்கு படுத்துவதற்கு திட்டமிடலாமா? இந்த கேள்விகள் ஆட்சியாளர்களுக்கு எழ வேண்டும் என்பதே நமது அவா.

Wednesday, December 23, 2009

திருவாதிரைக்கு யாழ்பாண தமிழருக்கு கப்பல் விடுங்கள்

ஈழத்தமிழர்கள் மத்தியில் சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்கள், கத்தோலிக்க நம்பிக்கை கொண்டவர்கள் என மக்கள் இருக்கிறார்கள். அதில் குறிப்பாக யாழ்பாண வளைகுடாவில் வாழ்கின்ற மக்கள், சைவ சமயத்தின் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற அல்லது வாழ்ந்து வந்த பெருவாரியான தமிழ்மக்கள், சைவ சமயம் சார்ந்தவர்களே. இந்து மதத்தில், சைவம், வைணவம் என்ற இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தாலும் கூட, தமிழர்கள் மத்தியில் குறிப்பாக சைவ சமயத்தின் செல்வாக்கு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. சிவன் வழிபாட்டை சார்ந்திருக்கின்ற தமிழ்மக்கள், சிவாச்சாரியார்கள் என்ற முன்னோடிகளை மரியாதைக்கூறியவர்களாக பார்த்து வருபவர்கள். முருகன் வழிபாட்டை வழக்கமாக கொண்டவர்கள், அதில் மிகப்பெரும் பான்மையினராக மூழ்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே எடுத்துக் கொண்டாலும், முருக கடவுள் வழிபாடு என்பது ஒரு முதன்மையான வழிபாடாக இருக்கிறது. முருகக்கடவுளை, தமிழ் கடவுள் என்று அழைக்கும் அளவுக்கு, ஆன்மீகம் இங்கே ஆழவிதை போட்டுள்ளது. மௌரீசியஸ் சென்று வந்த பிறகு, அங்குள்ள தமிழர்கள் பற்றி 25 ஆண்டுகளுக்கு முன்னால், மதுரையிலே உரையாற்றும் போது, ஆர்.எம்.வீரப்பன் ஒரு செய்தியைக் கூறினார். அதில் தயவு செய்து பகுத்தறிவு பார்வை கொண்டு, தமிழ் இனத்தை, தமிழர்களை பிளவுபடுத்தி விடாதீர்கள் என்று கூறினர். அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொண்டதுதான் மௌரீசியஸ் நாடு. அங்கே இருக்கின்ற மக்கள் தொகை அனைவரும் தமிழர்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசத்தெரியாது. தமிழ் எழுதத்தெரியாது. ஆகவே இங்கிருந்து தமிழாசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவரது அவாவாக இருந்தது. ஆனால் இங்கே இருக்கும் தமிழர்களையும், மௌரீசியஸ் நாட்டின் வாழும் தமிழர்களையும் இணைப்பது ஒன்றே ஒன்றுதான் என்று அவர் கூறினார். அது கடவுள் வழிபாடுதான் என்று விளக்கம் அளித்தார். அங்கேயும் முருக கடவுளைத்தான் வழிபடுகிறார்கள் என்ற செய்தியைக் கூறினார். அதன் மூலம் அவர்களும் தமிழர்கள்தான் என்பதை அறுதியிட்டார். இங்குள்ள தமிழர்களுக்கும், மௌரீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையிலே உள்ள இணைப்பே முருகக்கடவுள்தான் என்று விளக்கினார். மேற்கண்ட ஆர்.எம்.வீரப்பனின் விளக்கம் உண்மையிலேயே சிந்திக்க கூடியதாக இருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையும், இணைப்பையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுவதற்கு, அல்லது வலுப்படுத்துவதற்கு, பல்வேறு அடையாளக் குறியீடுகள் அவசியமாகிறது. அப்படிப்பட்ட அடையாளக் குறியீடாக, ஆன்மீக சின்னங்கள் ஆண்டுபலவாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. அதுதான் இந்த இடத்தில், தமிழர்கள் மத்தியில் முருகக்கடவுள் என்ற அவதாரமாக காட்சியளிக்கிறது. சைவ சித்தாந்தமும், அதன் இலக்கியங்களும் பழம்பெருமை வாய்ந்தவை. அவை ஆழமாக தமிழர் பெருமையை, தமிழர் பண்பாட்டை பதியவைக்கின்றன. சைவ சித்தாந்த நூல்கள் இன்று வரை, தமிழ் இலக்கியத்தின் வரலாற்று சான்றுகளாக நிற்கின்றன. யாழ்பாணத்தில் மட்டுமல்லாது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில், முருகன் கோவில்கள் பிரபலமானவை. அதே போல புலம் பெயர் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்ற, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும், கோயில்களை தாங்கள் வாழும் இடங்களில் நிறுவுவதும், அவற்றில் தமிழிலேயே பூசைகள் செய்வதும், சைவ சமய பரப்புரைகளை கவனமாக, முறையாக தொடர்ந்து செய்து வருவதும் நாம் அறிந்த செய்தியே. அந்த அளவுக்கு சைவமும்,தமிழும் இரண்டறக் கலந்து நிற்கின்ற ஒரு நிலையை, தமிழ் தேசியத்தின் விடுதலைப்போராட்ட காலமான இன்று, நாம் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. களத்தில் தமிழர் விடுதலைக்கான கருவி ஏந்திய போராட்டத்தை நடத்திய போராளிகள் கூட, தங்களது போர்க்கள வெற்றியை கொண்டாடும் முகத்தோடு, அவ்வப்போது அங்குள்ள முருகன் கோவில்களில், புலால் உண்டு மகிழ்ந்தார்கள் என்பதான செய்திகள் வந்ததுண்டு. அன்று முதல், இன்று வரை இப்போதும் சைவ சமய சிந்தனைகளில் ஊறிப்போன குடும்பங்களாக, தமிழ் குடும்பங்கள் இருந்து வருகின்றன. தங்களது இன அடையாளங்களை, இழப்பதற்கு தயாராய் இல்லாத ஒரு இனம், தங்களது சமயச் சார்பு அடையாளங்களை இழப்பதற்கும் தயாராக இருக்காது. பகுத்தறிவு பார்வையும், பெரியார் சிந்தனையும் கொண்ட தமிழ் மக்களே கூட, தமிழ் தேசிய இனத்தின், சைவச் சமய ஈடுபாட்டையும், பண்பாட்டு பழக்கங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட பண்பாட்டு உரிமைகளை, அவர்கள் இழப்பதையோ, அவர்களது சமயச்சார்பு செயல்பாடுகள் மறுக்கப்படுவதையோ, சுதந்திர மான ஆன்மீக செயல்பாடுகள் செய்வதற் கான உரிமை பதிக்கப்படுவதையோ, மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதை மனித உரிமை மீறல் என்பதாகவே அழைக்கின்றனர். மதத்தின் உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும் என்பதுதான் அகிலம் தழுவிய மனித உரிமை பிரகடனம் என்று அழைக்கப்படும், ஐக்கிய நாட்டு சபையின் பிரகடனம் கூறுகிறது. சைவ சமயத்தில் ஊறிப்போன தமிழர்கள், ஒவ்வொரு நாளும் 5 நேரமும் தேவாரம் பாடுவார்கள் என்ற செய்தி, யாழ்பாண தமிழர்கள் பற்றி அநேகமாக தமிழகத்து மக்கள் அறிந்திராத செய்தி. அதுமட்டுமின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவ்வப்போதும் சமீபத்தில் தொடர்ச்சியாகவும், யாழ்பாணத்தில், திரிகோண மலையில், வவுனியாவில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில், மன்னாரில், மட்டக்களப்பில், ஆக்கிரமிப்பாளர்களாக அமர்ந்திருக்கும் இலங்கை ராணுவம், முழுமையாக சிங்களவர்களைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் அனைவரையும் புத்தமத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களது வழிபாட்டுக்காக, ஒவ்வொரு ராணுவ முகாம்களுக்கு பின்னாலும், ஒரு புத்த பெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் போன்ற பகுதிகளில், இயற்கையாகவே எல்லா இடங்களிலும், அரசமரம் இருக்கிறது. அப்படிப்பட்ட அரசமரங்களின் அடியில், இத்தகைய புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் புத்தர்தான், புத்தமதத்தின் அடையாளக்குறியீடு. அப்படிப்பட்ட பண்பாட்டு குறியீட்டை, பயன்படுத்தி சிங்கள அரசாங்கம் தனது ராணுவத்தினரது மத நம்பிக்கை உணர்வுகளுக்கு உரம் போட்டு விடுகிறார்கள். ராணுவ முகாம்களில் தினசரி அதிகாலை, புத்தபெருமானை எழுப்புகின்ற பாடல்கள் என்ற சுப்ரபாதங்கள் இசைக்கப்படுகின்றன. அருகே இருக்கும் தமிழ்மக்கள் குடியிருப்புகளில், வாழ்ந்து வரும் தமிழ் பெண்களுக்கு, இது ஒரு எரிச்சலூட்டும் செயலாகவும், பண்பாட்டு ஆக்கரமிப்பாகவும் படுகிறது. சைவ சமய நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், கந்தசஷ்டி கவசம் போன்ற பாடல்களை, தொடர்ந்து இசைத்து அதிலேயே லயித்து போய் பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சிங்களர்கள் கொடுக்கின்ற புத்திச பரப்புரை பெரும் பண்பாட்டு ஆக்கிரமிப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட பண்பாட்டு சிக்கலிருந்து, நெருக்கடியிலிருந்து, மூச்சு விடுவதற்கான நேரத்தையாவது கொடுப்பதுதான் மனிதப் பண்பு.அப்படிப்பட்ட வாய்ப்பு ஒன்று, இப்போது இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. அதாவது பாரம்பரியமாக தங்களது சைவச் சமய வேர்களை, தமிழ்நாட்டில் தேடிக்கொண்டிருக்கும், யாழ்பாண தமிழர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பு அது. அதாவது இந்த மாத இறுதியில் திருவாதிரை திருநாள் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் சிதம்பரம் கோயிலில், திருவாதிரைத் திருநாள் 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டுடன் நடக்க இருக்கிறது. அதை ஆருத்ர தரிசனம் என்பதாக அழைக்கிறார்கள். அந்த சைவ வழிபாட்டுக்கு, யாழ்பாணத்திலிருக்கின்ற, மற்றும் ஈழத்திலிருக்கின்ற சைவச் சமயச் சார்பு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வந்து, கலந்து கொண்டு, உவகை கொள்வது வழக்கம். பல பத்தாயிரம் மக்கள், ஈழத்திலிருந்து சிதம்பரத்திற்கு வருவார்கள். அவர்கள் தமிழகம் வந்து, சிதம்பரம் கோயிலில் திருவிழாவில் கலந்து கொள்ள உதவிகரமாக, இந்திய அரசு தொடர் கப்பல் போக்குவரத்தை செய்து வந்தது. 30 ஆண்டுகளாக நடந்து வந்த ஈழப்போர் காலத்தில், அப்படிப்பட்ட பயணங்கள் நிறுத்தப்பட்டன. இப்போது அரசு அறிவிப்புப்படி போர் முடிந்து விட்டது. தேர்தல் வரயிருக்கிறது. தமிழ் மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவையென, அரசியல்வாதிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆகவே இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்கள், ஆருத்ரா தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கில், சிதம்பரம் வருவதற்கு ஏதுவாக கப்பல் போக்குவரத்தை இந்திய அரசு செய்து கொடுக்குமா? தமிழக அரசு நிர்பந்திக்குமா? தமிழரான உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஈழத்தமிழர்கள் சிதம்பரம் வருவதற்கு வழிவகை செய்வாரா? இந்த கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.

Tuesday, December 22, 2009

கோபன்ஹெகன்: பணம் கொடுத்து உடன்பாட்டை வாங்கிய வர்த்தகர்கள்?

நேற்று அமெரிக்கா முழுவதும் பனியால் மூடப்பட்டது. வரலாறு காணாத பனி என்பதாக அது வருணிக்கப்பட்டது. நியூயார்க் சாலை முழுவதும் பனி மூடியிருந்தது. கிறிஸ்மஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க முடியாமல் பொதுமக்களும், நிறுவனங்களும் திணறினார்கள். பிரான்சிலிருந்து அமெரிக்காவிற்கு வருகின்ற பாதை முழுவதும் பனிப்படலம் ஸ்பெயின் நாட்டிலும், சீன நாட்டிலும் கூட இதே நிலைமை. அளவுக்கதிகமாக பனிப்படலம் வந்ததற்கு யார் காரணம்? பருவநிலை மாற்றம் கண்டபடி விரைவாக மாறிக்கொண்டேயிருப்பது எதனால்? வழமையாக கட்டுக்கள் இருக்கும் பருவநிலையை, சந்தித்த மக்கள் தங்களது கிறிஸ்மஸ் விழாவை குடும்பத்துடன் ஈடுபாட்டுடன், கொண்டாடுவார்கள். அப்போதெல்லாம் இயற்கை அவர்களை எதிர்த்து சதிசெய்ததில்லை. ஆனால் இப்போது இயற்கை பனிவடிவமெடுத்து தடையாக வந்து நிற்கிறது. மனிதர்களை இயற்கை ஏன் இப்படி வதைக்கிறது? இயற்கையின் விதிகள் வழமைபோல், அதன் போக்கிற்கு முன்சென்று கொண்டிருக்கிறது. மானுடம் இயற்கை விதிகளை புரிந்துகொண்டு, தங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையுடன் கையாள்கிறார்களா? இயற்கையின் விதிகளை புரிந்துகொள்ளாமல், அதன் மீது தாக்குதல் நடத்தினால், இயற்கை பதிலுக்கு தாக்குதல் நடத்தும். அதனால்தான் அமெரிக்காவில், பனிப்பொழிவால் 5பேர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. மானுடத்தை ஒட்டுமொத்தமாக இதற்காக குறைசொல்லலாமா? மானுடத்தின் ஒரு சிறுபகுதி இப்படிப்பட்ட உடைவுக்கு, காரணமாக இருக்கின்றார்களா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகண்டுவிட்ட, உலகநாடுகள் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை காண, டென்மார்க் நாட்டில், கோபன்ஹெகன் நகரில் ஐ.நா.சபையின் ஏற்பாட்டில் கூடினார்கள். கூடி, கூடி பேசினார்கள். 10 நாள் பேசினார்கள். 11ம் நாளும் பேசினார்கள். 12ம் நாள் உலகத்தலைவர்கள் 119 நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் கூடினார்கள். அவர்கள் கூடுவதற்கு முன்னால், முன்வைக்கப்பட்ட வரைவு நகல்கள் விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி வந்தார். 119 நாட்டு தலைவர்கள் கூடி மேசைப் பேச்சு நடத்த முடியாது; தீர்வை விவாதித்து எட்டமுடியாது; ஆகவே தலைவர்களின் கூட்டத்திற்கு முன்னாலேயே, அமைச்சர்களும் பிரதிநிதிகளும் பேசிமுடிக்க வேண்டும் என்றும், தலைவர்கள் கையெழுத்திட்டு அறிக்கையை அறிவிக்க வேண்டும் என்றும் விளக்கமாக ஜெய்ராம் ரமேஷ் கூறிவந்தார். அதுமட்டுமின்றி கியோடா பிரகடனப்படி, வளர்ந்த நாடுகள் 2012க்குள் தங்களது வாயு வெளியேற்றத்தை, கடுமையாக கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வளரும் நாடுகளுக்கு தேவையான நிதியையும், தொழில்நுட்பத்தையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். மேற்கண்ட வலியுறுத்தல்கள் 12ம் நாளுக்குப்பிறகு, தலைகீழாக மாறிவிட்டதா என்று நாம் ஜெய்ராம் ரமேஷை கேட்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏனென்றால், ஜெய்ராம் ரமேஷ் கூறிய 119 நாட்டு தலைவர்கள் கூட அல்ல, வெறும் 4நாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபருடன் சேர்ந்து ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி, முந்தைய அறிவிப்புகளுக்கு முரண்பட்டிருக்கிறது என்று அந்த மத்திய அமைச்சருக்கு தெரியுமா என நமக்குத் தெரியாது. அதேபோல 5 தலைவர்களும் சேர்ந்து, 12 நாட்களாக 100க்கும் மேற்பட்ட நாட்டுப் பிரதிநிதிகள் கூடிப் பேசி, முடிவுக்கு வரமுடியாத ஒரு வரைவு நகல் மீது, முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது எப்படிச் சாத்தியம்? அதுபோலவே விடாபிடியாக, இந்தியாவும், சீனாவும், வளரும் நாடுகளும் அழுத்தம் கொடுத்து வந்த, கியோடா பிரகடனம் ஓரங்கட்டப்பட்டு, ஒரு முடிவு உருவாகிறது என்றால், அது அனைத்து நாட்டு அங்கீகாரம் பெற்ற முடிவா? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் எழுந்தாலும் கூட, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷûக்கு எந்த கேள்வியும் எழாமல், வெளியே வந்த அறிக்கையை ஆதரித்து பேச மட்டும் தைரியம் வந்தது எதனால்? ஒபாமாவினுடைய திடீர் பிரவேசம், இப்படியொரு ஏடா கூடமான அறிக்கையை வெளியே கொண்டு வந்திருக்கிறது என்பதை உலக ஊடகங்கள் வேடிக்கையாகப் பார்க்கின்றன. ஐ.நா.வையே தகர்ந்தெறிந்தார் பாரக் ஒபாமா என்று ஒரு தலைப்பு. அதாவது ஐ.நா. ஏற்பாடு செய்து பருவநிலை மாற்றத்திற்கான 15வது மாநாட்டில், தொடக்கத்திலிருந்தே ஐ.நா. முன்வைத்த 1990ன் மட்டத்தில் இருந்த, வாயு வெளியேற்ற அளவை அடிப்படையாகக் கொண்டு, எந்த அளவு ஒவ்வொரு நாடும் வாயு வெளியேற்றத்தை செய்யும் என்று கேட்டு வந்ததை, மறுத்து அமெரிக்கா முன்வைத்த 2005ம் ஆண்டின் மட்டத்தை அடிப்படையாகக் கொள்வது என்பதையே, பலநாடுகளும் பேசி வந்தன. கடைசியாக ஐ.நா. கூட்டிய 119 நாட்டு தலைவர்கள் கூடி முடிவு செய்யாமல் 5 நாட்டு தலைவர்கள் முடிவு செய்தார்கள் என்றால், ஐ.நா.வையே தகர்த்தார் பாரக் ஒபாமா என்ற தலைப்பு பொருத்தமானதே. உலக சமூகம் இரவில் இருட்டில், காணாமல் போனது என்பதாக, ஊடகங்கள் தலைப்பிட்டன. இதுவும் கூட முழு இரவிலும் நடந்த மேசைப் பேச்சில், தூங்கி வழிந்து கொண்டே கலந்து கொண்ட பல நாட்டு தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, 5 நாட்டு தலைவர்கள் முடிவு செய்தார்கள் என்றால், உலக சமூகம் இருட்டில் காணாமல் போனது என்பதாகத் தான் பொருள் கொள்ளமுடியும். மனித உரிமைகள், பெண்களின் பாத்திரம், போலியோ எதிர்ப்பு, அகதிகள் பிரச்சனை ஆகியவற்றைப் பேசும் போது, ஐ.நா. சபையும் பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளை வரவழைத்து, அமரவைத்து பேசி முடிவெடுப்பார்கள். ஆனால் தங்கள் பொருளாதாரத்தின் மையமான, எரிபொருளான பிரச்சனையை பேசும் போது, அந்த ஏழை நாடுகள் பற்றி மறந்து விடுவார்கள். அமெரிக்க பொருளாதாரத்தில் மையமாக 50 ஆண்டுகளாக நிலக்கரி இருக்கிறது. போர் பற்றியும், சமாதானம் பற்றியும் பேசும் போதும், அவர்கள் ஏழை நாடுகளை புறந்தள்ளினார்கள். இப்போது பூமி வெப்பமடைதல் விஷயத்திலும் அதையே செய்கிறார்கள். அப்படியானால் ஐ.நா.சபை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது? தீவிர மாசுபடுத்தும் நாடுகளை ஒரு கூட்டாக அமெரிக்கா சேர்த்து விட்டது. சீனாவும், அமெரிக்காவும், இந்தியாவும் தாங்கள் நிலக்கரியை அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தை, நிறைவேற்றி இருக்கிறார்கள். இது நரிகளின் கூட்டணி. இந்த நரிகள் கூட்டுச் சேர்ந்து, கோழிக்குஞ்சு பண்ணையை பாதுகாக்கப் போகின்றனர். அவர்களது இலக்குகள் பலவீனத்தில் தொடங்கி இருப்பற்ற நிலை வரை எட்டுகிறது. ஒபாமாவின் இந்த அறிக்கையை, வருங்காலத்தில் அமெரிக்காவிற்கு வரப்போகிற குடியரசு கட்சியின் அதிபர் ஏற்றுக் கொள்வாரா என்பது இன்னொரு பிரச்சனை. எது எப்படியிருந்தாலும் பாரக் ஒபாமா, ஐரோப்பாவையும், உலகிலுள்ள ஏழை நாடுகளையும் இழுத்துப்போட்டு, தன்னுடைய உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக அறுவடை செய்து விட்டார் என்பது தான் உண்மை. அதில் ஜார்ஜ் புஷ்ஷை விட, ஒபாமா கெட்டிக்காரர் என்பது நிறுவனமாகிறது. ஆனாலும் கூட ஜி77 நாடுகள் இந்த கோபன்ஹெகன் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. புஷ்ஷிடமிருந்து, ஒபாமா மாறுபட்டவரல்ல என்பதும் நிருபணமாகியுள்ளது. கோபன்ஹெகன் பூமி வெப்பமடைதல் பற்றியது அல்ல; பணப்பரிமாற்றம் பற்றியது என்பதாக ஒரு செய்தி வெளியாகியது. இந்தியாவிலும், சீனாவிலும் இருக்கின்ற மிகச்சிலர் சேர்ந்து கொண்டு, தங்களது நலனுக்கு எப்படி இந்த உலக நிலைமையை கையாள முடியும் என்று கற்றுவைத்திருக்கிறார்கள். இந்த உலகில் எது வேகமாக வளர்ந்து வரும் சரக்கோ, அதை திரட்டி வைத்துக்கொண்டு விற்பனை செய்கின்ற வர்த்தகர்கள், வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிகளை எட்டுவதற்கு மூலக்காரணமாக, கோபன்ஹெகன் மாநாட்டின் அரசராக, அறிவியல் மேதை என்று வருணிக்கப்பட்ட டாக்டர் ராஜேந்திர பச்சௌரி இருந்தார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அவர் ஒரு முன்னாள் ரயில்வே பொறியியலாளர் என்றும், பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர் என்றும், சுற்றுச்சூழல் அறிவியலாளர் அல்ல என்றும், இப்போது சூழலை மாசுபடுத்தும் வணிகக்குழுமங்களுக்கு விலை போய், உலக மக்கள் விரோத உடன்பாடொன்றை, அறிவிக்க துணைப் போய் விட்டார் என்றும், உலகெங்கிலும் இருந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக சதிக்கு, அமெரிக்காவுடன், இந்திய அரசு கைகோர்த்துக் கொண்டதா? இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

Monday, December 21, 2009

விவசாயத்துறை அமைச்சர் எதைச் சாதித்தார்?

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இந்த கட்சி, இந்திய தேசிய காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, மத்திய அரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆண்டு கொண்டு வருகிறது. இவர்களது கட்சியின் அகில இந்திய மாநாட்டில், பேசும் போது, சரத்பவார் இந்தியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு பற்றி அக்கறையுடன் பேசியுள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்களில் விலை உயர்வு என்பது, சாதாரண மக்களை தாக்கி வருகிறது என்ற உண்மையை அப்போது மொழிந்துள்ளார். இந்த உண்மை நிலவரத்தை மாற்றி அமைப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாடு எதிர்கொண்டு வரும் பெரும் வறட்சியை சமாளித்து வருவதாகவும், பெருமையாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய அரசு தான் எடுக்கின்ற முன்னேற்றமான நடவடிக்கைகளின் மூலம், பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்கு குறைத்திருக்கிறோம் என்றும் பீற்றிக்கொண்டுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கட்டாயத்தேவை என்பதை அந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்திருப்பதாகவும், செய்து கொண்டிருப்பதாகவும், மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டியதுதான் பாக்கி என்பதாகவும் அமைச்சர் சரத்பவார் புரிய வைத்துள்ளார். இதுதான் உண்மையா என்பதையும், உண்மை நிலை என்ன என்பதையும் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் நள்ளிரவில் சுதந்திரம் வாங்கிய பிற்பாடு, இந்திய ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன என்பது பார்க்கப்படவேண்டும். விவசாயத்தை வளர்ப்பதற்கான திட்டங்களாக, 5ஆண்டு திட்டங்களும், கட்டப்பட்ட அணைக்கட்டுகளும், அன்றைய கால முயற்சிகளாக இருந்தன. அதன் பிறகு தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அமைச்சர்களும், ஆட்சியாளர்களும், விவசாயத்திற்கு எந்த அளவுக்கு கவனம் செலுத்தினார்கள் என்பதை கணக்கில் கொண்டுதான் விவசாயத்துறை அமைச்சரின் வாதங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளமுடியும். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் என்று அமைச்சர் சரத்பவார் கூறியிருப்பது, சமவெளிப்பகுதிகளில் விவசாயத்தின் மூலம் கிடைக்கின்ற விளை பொருள்களையும், மலைப்பகுதிகளில் இயற்கையாக உருவாகின்ற பழவகைகள் மற்றும் தேன் போன்ற இயற்கை பொருட்களையும், கடல் பகுதிகளில் கிடைக்கின்ற மீன், நண்டு, மற்ற கடல் வாழ் உயிரினங்களையும் மொத்தமாக குறிக்கிறது. இன்னமும் குறிப்பாக சொல்லப்போனால், கடல் வாழ் உயிரினங்களை பிடித்துக் கொண்டு வருகின்ற மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்ற மீன்வளத்துறையும், இவரது கைகளில் இருக்கின்ற விவசாயத்துறைக்கு உள்ளேதான் அடக்கம். அதாவது மீன்வளத்துறைக்காக மாநிலங்களில் இருப்பது போல, தனியானதொரு அமைச்சகம் மத்திய அரசில் இல்லை. இதன் மூலம் வேறுபட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட, உணவுப் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தியை ஒழுங்குபடுத்த பிரத்யேகமான ஆய்வுடனும், பார்வையுடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டிய பிரத்யேக அமைச்சகத்தை ஏற்படுத்தாமல் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் மத்திய அரசு வைத்திருப்பதனால் கூட, வளர்ச்சிக்கு குந்தகமான நிலைமை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. விலை உயர்வால் அவதிப்படுகின்ற பொதுமக்களைப்பற்றி பவார் கவலைப்பட்டிருக்கிறார். அதுவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதை குறிப்பிட்டு கவலைப் பட்டிருக்கிறார். அப்படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மக்களை சென்றடையாவிட்டால், மக்கள் நிலைமை பட்டினியில் தான் சென்று முடியும். அப்படிப்பட்ட பட்டினி சூழல் எத்தனை மக்களை பாதித்திருக்கிறது என்று பட்டியல் கேட்போம் என்றால், அதற்கும் அரசு ஒரு புள்ளி விவரத்தை தருகிறது. அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான புள்ளி விவரப்படி, இந்தியாவில் இப்போது 35 கோடி மக்கள் வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். வறுமையின் எல்லைக் கோடு என்பதை அரசாங்கம் ஒரு அளவுக்குறியோடு வரையறுத்துள்ளது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.12 வருமானம் பெறக்கூடிய மக்களும், நகர்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.18 வருமானம் பெறக்கூடிய மக்களும், வறுமைக்கோட்டின் எல்லைக்கு கீழ் உள்ளவர்கள் என்பதாக அரசாங்கம் வரையறுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பெண்களின் மக்கள் தொகையில் 50 விழுக்காடுவே எழுத்தறிவு இன்றி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை அரசாங்கமே தருகிறது. பெண் சிசுக்கள் பல இடங்களில் கொல்லப்படுவதால், பல மாநிலங்களில் ஆண் பெண் விகிதாச்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் பல மாநிலங்களிலிருந்தும், அதிகமான எண்ணிக்கையில் வெளிவந்து கொண்டிருப்பதால், இப்போது அதை தொடர்ந்து சொல்வதற்கே ஆளில்லாமல் ஆகிவிட்டது. பல லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாத நிலையில் வெளியேறி விட்டனர். அதில் பல குழந்தைகள் தெருவோர குழந்தைகள் பட்டியலில் சேர்ந்து விட்டனர். அதில் பலரும் 10 வயதுக்கு முன்பே, கடுமையான உழைப்பில் ஈடுபடுத்த வைக்கப்படுகின்றனர். அதாவது குழந்தைத் தொழிலாளர்களாக நாடெங்கிலும் அவதிப் பட்டுவருகின்றனர். இப்படிப்பட்ட அனைத்துப் பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது வறுமை, வேலையின்மை ஆகியவை. பட்டினி என்பது இந்த நாட்டு மக்களுடைய இணை பிரியா சொத்தாக மாறியிருக்கிறது. அனைத்திற்கும் பொறுப்பெடுக்க அமைச்சர் சரத்பவாரின் விவசாய அமைச்சகம் தயாராக இருக்கிறதா? அமைச்சர் கூறும்போது, இதுவரை இல்லாத அளவு எழுந்துள்ள வறட்சி நிலைமை பற்றிக் கூறுகிறார். அதற்கான காரணத்தை அடுக்கும் போது, மழை பொய்த்துவிட்டதால் நாட்டின் பல்வேறு பாகங்களில் இந்த முறை வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதே கூற்றைத்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், தான் ஆட்சிப் பொறுப்பு எடுத்தவுடனேயே கூறி, அதற்காக பல்வேறு அகில இந்திய மாநாடுகளை நடத்தி, அதெற்கெல்லாம் தீர்வு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்தான் என்று கூறினார். அதன் பெயரையும் கூட, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டம் என்பதாக பெயர் மாற்றம் செய்து, அதன் மூலம் ஆட்சியாளர்கள் அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படியிருந்தாலும், மக்களின் பிரச்சனை மட்டும் தீரவில்லை என்பதை, அவர்களது உரைகளே அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அமைச்சர் சரத்பவார் பொறுப்பில் உள்ள அமைச்சகத்திலிருக்கும், மீன்வளத்துறை இப்போது மீனவ மக்களுக்கு முன்னால், பெரும் சவாலை வைத்துள்ளது. 2009ம் ஆண்டின் மீன்பிடி தொழில் ஒழுங்கு படுத்தல் மசோதா என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கின்ற அந்த துறை, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்களாலும், வெவ்வேறு கட்சிகளாலும், அந்த மசோதாவுக்கு எதிரான கருத்தையும் பெற்றுள்ளது. அப்படி இருந்தும் கூட 12 கடல் மைல்களைத் தாண்டி, பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என்ற இந்த புதிய வரைவு மசோதா, நாடெங்கிலும் சீக்கிரத்தில் கலந்துரையாடலுக்கு அனுப்பப்படும் என்ற செய்தியை மௌனமாக மத்திய அரசு தருகின்றது. 12 நாட்டிங்கல் என்ற கடல் மைல்களை தாண்டி உள்ள பகுதியை முழுமையான பொருளாதார மண்டலம் என்பதாக இந்திய அரசு அழைக்கிறது. அப்படிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் மீன் பிடித்தல் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் முன்வைக்கின்ற நகல்தான் அது என்பது அவர்களது விளக்கம். இப்போது எதிர்ப்பு எல்லா திசையிலிருந்தும் எழுந்து வந்ததால், மாநில அரசாங்கங்கள் உட்பட, மீனவ மக்களையும் சேர்த்து, இதன்மீதான கலந்தா லோசனைகளை விரிவாக நடத்தப்போகிறோம் என்றும், அதற்கு பிறகே இந்த மசோதாவை சட்டமாக்கும் முயற்சிக்கு முன்செல்வோம் என்றும், இந்த துறை கூறுகிறது. இந்தியா மீன்களையும், மீன்களிலிருந்து உருவாக்கப்படும் உற்பத்தி பொருள்களையும் ஏற்றுமதி செய்வதில் முதன்மையான நாடாக, உலகத்தில் நிற்கிறது. அதை இறக்குமதி செய்யும் நாடுகளில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட உலகின் பலநாடுகள், சட்ட விரோதமான மீன் பிடித்தல், ஒழுங்கு படுத்தப்படாத மீன் பிடித்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒழுங்கு படுத்தலுக்கான ஒரு சட்டத்தை உருவாக்காமல், அத்தகைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்ற நிலையில், இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் பாரம்பரிய மீனவ சமூகத்தை, இத்தகைய மசோதாக்கள் எந்தளவு திவாலா ஆக்கிவிடும் என்ற சமூகப்புரிதல் அரசு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு, மத்திய அரசு பொறுப்பு எடுப்பதுதான் முறையே தவிர, மாநில அரசுகள் மீது பொறுப்பை தள்ளி விடும் முறை, ஒரு பொறுப்பற்ற தன்மை கொண்டதே.

Sunday, December 20, 2009

காடுகளிலிருந்து தலைநகர் நோக்கி...

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் அவர்கள் கூடினார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் கூடிய அந்த கூட்டத்தில் பெருவாரியானவர்கள் ஆதிவாசிகள். ஒரிசாவிலிருந்து பலர் வந்திருந்தார்கள். பஞ்சாபிலிருந்து அந்தப் பேரணிக்கு அணி திரண்டவர்கள் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாட்டிலிருந்தும் ஆதிவாசிகள் அணிதிரண்டு வந்தார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி புறப்பட்டது. ஜந்தர்மந்தர் மையத்திலேயே வழக்கமாக டெல்லியில் எடுக்கப்படும் பேரணிகள் எல்லாம் தடுக்கப்படுவது போல, அவர்களும் தடுக்கப்பட்டார்கள். அவர்களது பேரணி முக்கியமாக சத்திஸ்கர் மாநிலத்தில், துணை ராணுவமும், காவல்துறையும், சல்வாஜுடும் என்ற காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையும் இணைந்து கொண்டு, ஆதிவாசி மக்களை அடிப்பதையும், உதைப்பதையும், கிராமங்களில் புகுந்து படுகொலை செய்வதையும், முழக்கங்களாகவும், கோரிக்கைகளாகவும் உயர்த்தி பிடித்து, அந்த பேரணி நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட பேரணியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும், டெல்லிப் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்டவர்களில் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்தும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்தும் வந்திருந்த ஆதிவாசி மக்களின் பின்னணி கொண்ட மாணவர்கள் சிலர் இருந்தனர். அவர்களிடம் வினவும் போது, அந்த இரு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்ற காவல்துறையின் அடக்குமுறை பற்றி விரிவாக எடுத்துக்கூறினர். ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த பெண்களை இந்திய அரசப்படையினர் எத்தனை தூரம் பாலியல் பலாத்காரங்கள் செய்து வருகின்றார்கள் என்ற விவரங்களையும் ஊடகயியலாளர்களிடம் விவரித்துக் கொண்டிருந்தார்கள். சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து, 10,000 ஆதிவாசி மக்கள் மூன்று ரயில் வண்டிகளில் முழுமையாக ஏறி, பயணச்சீட்டின்றியே டெல்லி நோக்கி தங்களது ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டு வர இருக்கிறார்கள் என்ற செய்தி, டெல்லி ஊடகயியலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்களை, ரயில் வண்டியிலே ஏறவிடாமல், ரயில்வே துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், திட்டமிட்டு தடுத்துவிட்டார்கள். இதுதான் ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் வரை வந்து தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, அதன் மூலம் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை வைத்து விட்டதாக திருப்தி அடைகின்ற மக்களுடைய உணர்வுகளுக்கு கிடைக்கின்ற மரியாதை. அதே போல ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதே பேரணிக்கு ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் கிளம்பியிருக்கிறார்கள். அவர்களிடம் சென்று பேசிய காவல்துறை அதிகாரிகளும், துணை ராணுவப்படையினரும், ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அங்கிருந்து புறப்பட்டு டெல்லிக்கு பல்லாயிரக்கணக்கில் ஆதிவாசி மக்கள் செல்வார்களானால், வன்முறை வெடிக்கும் என்பதாக எடுத்துச் சொல்லி, அவர்களை பீதியடைய வைத்து, அங்கிருந்தும் டெல்லிப் பேரணிக்கு வரவிடாமல் செய்வதில் அரசு வெற்றியடைந்துள்ளது. டெல்லி பேரணி மூலம் சில ஆயிரங்களில் திரண்ட ஆதிவாசி மக்களின் நலன்களுக்கான கூட்டம், கடைசியாக அரசிடம் ஒப்படைத்த மனுவில் பல்வேறு அமைப்புகள் கையெழுத்திட, அதில் மணிப்பூர் மாணவரமைப்பும், நாகாலாந்து மாணவர் அமைப்பும் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் இத்தகைய அணி திரளலுக்கு காரணமாக இருந்த சூழல், சத்திஸ்கர் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சத்திஸ்கர் மாநிலத்தில் ஆண்டு வருவது பா.ஜ.க. ஆனால் அங்கே ஜனநாயக உரிமைக்குரல் எழுப்புகின்ற ஆதிவாசிகளை, அடக்கிக் கொண்டிருப்பது மத்திய அரசு அனுப்பி வைத்த துணை ராணுவ படையினர். மாநில காவல்துறை காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற ஆதிவாசி மக்களின் நிலங்களையும், வளங்களையும் கொள்ளையடிக்க வருகின்ற, தனியார் லாபநோக்க நிறுவனங்களுக்கு தங்களது நிலத்தில் இருக்கும் கனிம வளங்களை களவாட விடாமல் தடுத்த ஆதிவாசிகளை, போஸ்கோ என்ற ஆலையை நிறுவுவதன் மூலம் பாதிக்கப்படுவோம் என்று போராடும் ஆதிவாசி மக்களை, அடித்து உதைத்து அராஜகம் செய்கின்ற போக்கை எதிர்த்து போராடி வருகிறார்கள். அதே போல ஆந்திராவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் டெல்லி பேரணிக்கு புறப்பட்ட ஆதிவாசி மக்களையும் கூட பல்வேறு முறைகளில் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தடுத்து நிறுத்தல்கள், ஜனநாயக ரீதியான போராட்ட வடிவங்கள் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமா? ஆயுதம் ஏந்திய பாதையை பரப்புரை செய்யும் மாவோயிஸ்டுகள் பக்கத்தில் அந்த மக்களை தள்ளிவிடுமா? மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் மத்திய அரசு இருக்கிறது. ஏனென்றால் வருகிற 25ம் நாள் ஒரு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்க வேண்டிய நிலைமைக்கு, சத்திஸ்கர் மாநிலத்திலிருக்கின்ற காந்தியவாதிகள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் டிசம்பர் 10ம் நாள், உலகம் மனித உரிமை நாள் நிகழ்ச்சிகளையொட்டி, ஒரு பாத யாத்திரையை திட்டமிட்டார்கள். அந்த பாதை யாத்திரையை தண்டே வாடா என்ற இடத்தில் தொடங்கி, சத்திஸ்கர் மாநில தலைநகர் ரெய்பூர் நோக்கி எடுத்துச் செல்வதாக, காந்தியவாதிகள் திட்டமிட்டிருந்தார்கள். தண்டேவாடாவிலுள்ள வனவாசிகள் சேத்னா ஆசிரமம் ஒன்றை காந்தியவாதி ஹிமன்ஷû குமார் நடத்தி வருகிறார். அவர் ஆதிவாசிகள் மக்கள் மீது அனுதாபம் கொண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். அனைத்து விதமான வன்முறைகளையும் அவர் எதிர்த்து வருகிறார். அரசு தரப்பிலிருந்து வன்முறைகள் வந்தாலும், மாவோயிஸ்டு தரப்பிலிருந்து வந்தாலும் அவர் அவற்றை சமரசமற்று எதிர்த்து போராடி வருகிறார். அரசு தரப்பு வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும், அதனாலேயே அரசு படைகளின் வன்முறைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஆதிவாசிகள் மாவோயிஸ்டு உதவிக்கு செல்வதையும், விளக்கமாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் அவர் விளக்கினார். அப்படிப்பட்ட ஹிமன்ஷû குமார், சந்தீப் பாண்டேயுடன் சேர்ந்து, மனித உரிமை ஆர்வலர்களை அழைத்துக் கொண்டு, சமாதானத்தையும், சகஜநிலையையும் ஏற்படுத்துவதற்காக தண்டே வாடாவிலிருந்து அன்று பாதையாத்திரையை தொடங்கினார். ஆனால் சத்திஸ்கர் மாநில அரசாங்கமும், சல்வாஜுடும் என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய கூலிப்படை அவர்களை தடுத்து நிறுத்தியது. அந்த வட்டாரத்தில் பொதுமக்கள், குறிப்பாக ஆதிவாசி மக்கள், அரசு ஒடுக்குமுறையாலும், ராணுவ மயத்தாலும், வன்முறையாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால்தான் அப்படி ஒரு சமாதானத்திற்கான பாத யாத்திரை தேவைப்பட்டது. அந்த மாநிலத்தின் காவல்துறை தலைமை அதிகாரியான டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், ஊடகயியலாளர்களிடம் காவல்துறை பாதுகாப்பில் பாத யாத்திரை தொடங்கியுள்ளது என அறிவித்தார். ஆனால் பாத யாத்திரை தொடங்குவதற்கு முன்பே அரசு சார்பில் வன்முறை சக்திகளால் தடுக்கப்பட்டது என்பதே உண்மை. நாடு தழுவிய அளவிலிருந்து 39 பெண் ஆர்வலர்கள் பாத யாத்திரையில் கலந்து கொள்ள, ரெய்பூர் வந்திறங்கி தண்டேவாடா நோக்கி புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் வரும் வழியிலேயே, காங்கர் என்ற இடத்தில் சல்வாஜுடுமால் தடுக்கப்பட்டு, பேருந்திலிருந்து இறக்கப்பட்டனர். அந்த பெண் ஆர்வலர்களை சித்ரவதை செய்து, ரெய்பூருக்கு கூலிப்படை திருப்பி அனுப்பியது. வருகிற 2010ம் ஆண்டின் ஜனவரி 7ம் நாள் வனவாசி சேத்னா ஆசிரமம் ஏற்பாடு செய்துள்ள புது விசாரணையில் கலந்து கொள்ள, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த சந்திப்பில் சல்வாஜுடும் பற்றியும், பச்சை வேட்டை பற்றியும், நீதிக்கான போராட்டம் பற்றியும், அந்த வட்டார ஆதிவாசி மக்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குகின்ற மாநில அரசாங்கம், அப்படிப்பட்ட சந்திப்பை அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் தான் ஹிமன்ஷû குமாரும், மற்றவர்களும் தண்டேவாடாவில் தங்களுடைய உரிமை கோரிக்கைகளுக்காக சத்தியகிரகத்தை தொடங்க இருக்கிறார்கள். உள்துறை அமைச்சரிடம், அவரது வருகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கச் சொல்லி கோரியிருக்கிறார்கள். சத்திஸ்கர் மாநில அரசாங்கம் எந்த சதி செய்தாலும், உள்துறை அமைச்சர் தனது வருகையை ரத்து செய்யக்கூடாது என்றும் கூட கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக பி.யூ.சி.எல். தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரஜிந்தர்சச்சார், மேதாபட்கர், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ஆதிவாசி மகளிர் சங்க தலைவி மமதா குஜுர், பி.யூ.டி.ஆர். ஆஷிஷ் குப்தா, ஆகியோர் அதே குரலை எதிரொலித்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால், இங்கே உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், அவரை நோக்கி இதே குரலை எதிரொலிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

Saturday, December 19, 2009

தலைக்கு மேல் தொங்கும் வாளாக பருவநிலை மாற்றம்

உலக நாடுகள் 119ம் இணைந்து டென்மார்க் நாட்டில், கோபன்ஹெகன் நகரில் கூடியுள்ளன. டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை ஒவ்வொரு நாட்டின் சுற்றுசூழல் அமைச்சர்களும், பிரதிநிதிகளும் பேசினார்கள். அவரவர் கருத்துக்களை கூறிவந்த பிரதிநிதிகள், உலகளாவிய ஒரு முடிவை எட்டுவதற்கு முன்சென்றார்களா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும், இடையில் தொடர்ந்து இழுபறி நிலை இருந்தது. இரண்டு முகாம்களும் தங்கள் கருத்தை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்தனர். வளர்ந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய பணக்கார நாடுகள், தங்களது நிதியுதவியை, வளரும் நாடுகளான ஏழை நாடுகளுக்கு கொடுத்து அதன் மூலம் வளரும் நாடுகள், தங்களது நாட்டிற்குள் இருந்து வெளியேறக் கூடிய கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கை களை எடுக்கவேண்டும் என்பதுதான் உலக கெங்கிலும் உள்ள நாடுகளின், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின், கருத்து. இதே கருத்தை ஐ.நா.வும் வலியுறுத்தி வந்தது. ஆனால் அமெரிக்கா உட்பட பணக்கார நாடுகள் மேற்கண்ட கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடித்து வந்தன. அதன் விளைவாகவே பல முறைகளில், பல கூட்டங்களில் பருவநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதற்கான பல்வேறு பேச்சு வார்த்தைகள் நடந்தும் கூட, ஒத்த கருத்துக்கு இரண்டு முகாம்களும் வரமுடியவில்லை.ஐ.நா.வின் மூலம் பருவநிலை மாற்றம் பற்றியும், பூமி வெப்பமடைதல் குறித்தும், அதனால் உலகெங்கிலும் வரயிருக்கும் ஆபத்துக்கள் சம்பந்தமாகவும், விரிவாக பல மாநாடுகள் நடத்தப்பட்டு, அவற்றில் அனைத்து நாடுகளும் விவாதித்துள்ளன. அப்படி விவாதிக்கப்பட்ட மாநாடுகளில், முக்கியமானதாக ரியோடிஜெனரோ மாநாடு குறிப்பிடப்பட வேண்டும். அப்போது ஓசோன் லேயரில் ஓட்டை விழுந்திருக்கிறது என்ற செய்தியை ஆபத்தான செய்தி என்று உலகுக்கு அந்த மாநாடு அறிவித்தது. ஓசோன் லேயர் என்றால் பிராணவாயு மண்டலம் என்பதாக விளக்கப்பட்டது. அகிலத்தில் இருக்கின்ற பல்வேறு மண்டலங்களில், இந்த பிராணவாயு மண்டலம், முக்கியமாக உலகின் ஜீவராசிகள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கின்ற சீதோஷ்ண நிலை சமன்பாட்டை ஒரே நிலையில் தக்கவைத்துக் கொள்ள உதவி வருகிறது என்பதை புரியமுடிந்தது. அப்படிப்பட்ட முக்கியமான பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது என்றால், உலகில் இருக்கின்ற காற்றழுத்த மண்டலங்கள் மாறி, மாறி ஏற்றத்தாழ்வாகி வருகின்றன என்பதும் உணரப்பட்டது. அவ்வாறு பிராண வாயு மண்டலத்தில் ஓட்டை விழுகின்ற அளவுக்கு, எத்தகைய வாயுக்கள் உலகிலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த மண்டலத்தை தாக்குகின்றன என்ற விவாதம் எழுந்தது. சாதாரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய குளிர்சாதன பெட்டிகள், குளிர்சாதன அறைகள், குளிர்சாதனம் பொறுத்தப்பட்ட வாகனங்கள், நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற் சாலைகள், திரையரங்குகள், பல்அங்காடிகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு வாயுக்கள் அனைத்தும் வானத்தில் பறந்து சென்று, இந்த பிராண வாயு மண்டலத்தை தாக்குகின்றன. அப்படி வெளியேற்றப்படும் கழிவு வாயுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர் ஹெக்சா பிளோரைடு ஆகியவை நச்சு வாயுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாயுக்களை சாதாரணமாக பொதுமக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தில் அதிகமாக பயன்படுத்தி வெளியேற்றுவதால், நகர்மயமாதல் அதிகமாகும் சூழலில், உயர் தொழில் நுட்பங்கள் அதிகமாக உள்ளே நுழையும் காலத்தில், மேற்கண்ட நச்சு வாயுக்களின் வெளியேற்ற அளவு அதிகரிக்கிறது. இப்படி அதிகமான அளவு வாயுக்களை வெளியேற்றக்கூடிய நாடுகளாக, அமெரிக்காவும், சீனாவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாயு வெளியேற்றத்தால் ஏற்பட்ட பிராணவாயு மண்டல ஓட்டைகளால், உலகெங்கிலும் இருக்கின்ற உஷ்ணநிலை மாற்றமடைகிறது. அதையொட்டி இருக்கின்ற பனிக்கட்டிகள் நாளுக்கு நாள் உருகிவிடுகின்றன. அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள் பூமியை தாக்குகின்றன. கடல் அளவிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த மாற்றங்கள் கடலை உள்வாங்குவதற்கும், அதையொட்டி நிலத்தின் அளவை அதிகப்படுத்துவதற்கும் சில நேரங்களில் பயன்படுகின்றன. அதே போல பல இடங்களில் கடல், நிலத்திற்குள் வீறிட்டு பாய்வதற்கும் வழி வகுக்கின்றன. அப்படி நடக்கின்ற நடவடிக்கைகள்தான், சுனாமி போன்ற பேரழிவுகளையும் ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவிலேயே கடல் நாட்டிற்குள் வந்து தொடுத்த பாதிப்புகளை, அந்த நாட்டு அரசாங்கமே தாங்க முடியாத சூழல் பிறந்தது. இதுபோன்ற கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகமாக செய்யக்கூடிய கருவிகளை வணிக நோக்கத்தில் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்யும் வணிக குழுமங்கள் பட்டியலிடப் படுகின்றன. குறிப்பாக அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டூப்பாண்ட் நிறுவனம், இதுபோன்ற நச்சு வாயு வெளியேற்றத்தை அதிகமாக உற்பத்தி செய்வதில், அதன் மூலம் பூமியை வெப்பமடைய செய்வதில் சாதனை படைத்துள்ளது. அதனால் அந்த டூப்பாண்ட் நிறுவனத்திற்கு, பசுமை அமைதி இயக்கம் என்ற உலக சுற்றுசூழல் இயக்கத்திலிருந்து, உலகிலேயே அதிகமாக மாசு கற்பித்தல் என்ற கேவலமான பணியை செய்ததாக ஒரு சான்றிதழை அளித்துள்ளது. அப்படிப்பட்ட டூப்பாண்ட் கம்பெனிதான், இந்தியாவிலுள்ள தாப்பர் கம்பெனியுடன் சேர்ந்து கொண்டு, தாப்பர் டூப்பாண்ட் என்ற ஆலையை, சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் நிறுவ எத்தனித்தனர். விமானங்களுக்கு தேவையான டயர்களை உருவாக்கக்கூடிய கம்பெனி என்ற பெயரில் இந்த ஆலை, கும்மிடிப்பூண்டியில் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை, ஆட்சியாளர்கள் ஒத்துழைப்போடு செய்தார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த முயற்சி அப்போதே, சுற்றுசூழல் ஆர்வலர்களாலும், வட்டார விவசாயிகளாலும், ஆலைத் தொழிலாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அதன் பிறகு பயோனியர் ஏட்டின் முதலாளியான தாப்பர் கம்பெனி, அந்த கூட்டு தொழிலிருந்து விலகிக் கொண்டது. அதன் விளைவாக டூப்பாண்ட் கம்பெனியின் தனது மாசுபடுத்தும் உற்பத்தியை மாற்றிக் கொண்டது. இப்படிப்பட்ட டூப்பாண்ட் கம்பெனி, அமெரிக்காவின் பன்னாட்டு மூலதன கம்பெனி என்ற காரணத்தினால், அமெரிக்க அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கியோடா நகரில் ஜி8 நாடுகள் என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகள் கூடி, பூமி வெப்பமடைதலையும், பருவநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்காக சில திட்டங்களை தீட்டினார்கள். அப்படி தீட்டிய திட்டங்களை, கியோடா பிரகடனம் என்ற பெயரில் வெளியிட்டார்கள். அந்த பிரகடனத்தில் கூறியுள்ளபடி 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பணக்கார நாடுகளான வளர்ந்த நாடுகள், கணிசமான தொகையை நட்டஈடு போல, வளரும் ஏழை நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்றும், அதை வைத்து புதிய தொழில் நுட்பங்களையும் பெற்று, வளரும் நாடுகள் தங்கள் நாடுகளில் இருந்த வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்களின் அளவை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டமுடியும் என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்த பிரகடனத்தை அமெரிக்க அதிபராக ஜார்ஜ்புஷ் இருந்த காலம் வரை அமுல்படுத்தாமலேயே தள்ளிப் போட்டு வந்தார். ஒரு முறை ஜி8 நாடுகளின் கூட்டத்திற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சென்ற போது இந்த கியோடா பிரகடனத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை மன்மோகன் முன் வைத்தார். ஆனாலும் அதை அமெரிக்க அதிபர் அலட்சியப்படுத்தி விட்டார். அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு மூலதன கம்பெனிக்கு நடத்துகின்ற உற்பத்தி குறைக்கப்படுமானால், அவர்களுக்கு கிடைக்கின்ற லாபம் குறைந்து விடும் என்பதனால் தன்நாட்டின் வணிக நலன்களுக்காக அமெரிக்க அரசு இந்த பிரகடனத்தை அமுல் படுத்தாமலேயே காலத்தை தள்ளி வந்தது. அதற்கு பிறகு வந்த பாரக் ஒபாமா முற்போக்கு முகத்தை காட்டிக் கொண்டிருந்தாலும், இந்த விசயத்தில் ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையையே பின்பற்றி வந்தார்.இதற்கிடையே கோபன் ஹெகன் மாநாட்டிற்கு முன்பே இரண்டு மாத காலமாக, மாநாட்டிற்கான வரைவு நகலை தயார் செய்வதற்காக நாடுகளுக்குள் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அப்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் வளரும் நாடுகளை முதலில் வாயு வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ளும் படி வற்புறுத்தி வந்தன. குறிப்பாக இந்தியாவையும், சீனாவையும் வலியுறுத்தி வந்தன. அது சம்பந்தமாக இந்தியா வந்த, ஹிலாரி கிளின்டனும் அப்படிப்பட்ட வற்புறுத்தல்களையும் செய்து தோல்வியுற்றார். இப்போது கோபன் ஹெகன் மாநாட்டில் முதல் பத்துநாட்களும் ஒரு முடிவு வராத நிலையில், அமெரிக்கா 10,000 கோடி டாலர்களை 2020க்கு பிறகு தாங்கள் தரவேண்டும் என்றால், ஏழை நாடுகள் அதற்கு முன்பே தங்கள் நாட்டு வாயு வெளியேற்றத்தை குறைத்து அதை சட்டமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதை இந்தியா, சீனா உட்பட ஜி77 நாடுகள் நிராகரித்தன. அதன்பிறகே மன்மோகனும், வென்னும் மாநாட்டை விட்டு வெளிநடப்பு செய்து, மீண்டும் உள்நடப்பு செய்யும் நாடகம் அரங்கேறியுள்ளது. இப்போது இல்லா விட்டாலும், அடுத்த ஆண்டு என்பதாக மன்மோகன் சமரச உரை நிகழ்த்தியுள்ளார். உலக மக்கள் தலைகளுக்கு மேல் தொங்குகின்ற வாள் கூர்மையாக இறங்கி வந்து கொண்டேதான் இருக்கிறது.

Friday, December 18, 2009

இலங்கை அதிபர் தேர்தலும், தமிழர் வாக்குகளும்

இலங்கைத் தீவில் ஒரு காலத்தில் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருந்து வந்தது. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும், தலைமையமைச்சரும், அவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களும் நாட்டை ஆண்டுவந்தனர். அத்தகைய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்காக, உறுப்பினர்களை விகிதாச்சார முறை மூலம் பொதுமக்கள் தேர்வு செய்து வந்தனர். விகிதாச்சார முறை என்பது ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை வாக்குகள் என்பதாக வாக்களிப்பதும், அதில் கட்சித்தலைமையால் நியமிக்கப்படும் வேட்பாளர்கள் வரிசைப்படி தேர்வு செய்யப்படுவதும் நடைமுறையாகும். இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, இங்கே நடந்துவரும் தேர்தல்முறை வித்தியாசமாகயிருக்கிறது. இந்தியாவில் ஒரு தொகுதியில் இருக்கின்ற 100% வாக்களர்களில், 60% வாக்காளர்கள் பொதுவாக, உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கிறார்கள். 3அல்லது 4 கட்சிகள் அதே தொகுதியில் போட்டிபோடும் போது, பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில், 20% அளவு வாக்குகள் பெற்ற ஒரு வேட்பாளர், அந்தத் தொகுதியிலேயே அதிகமான வாக்குப்பெற்றவராக ஆகமுடியும். அப்போது அவர்தான் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 20% வாக்குகளைப் பெற்ற ஒரு வேட்பாளர், 80% வாக்காளர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்கப்படாத ஒரு வேட்பாளர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கின்ற ஒரு தேர்தல் முறை நமது நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் விகிதாச்சார தேர்தல் முறை என்பது குறைந்தளவு வாக்குகளை பெற்றிருக்கின்ற ஒரு சமூகமோ, அல்லது ஒரு அரசியல்கட்சியோ கூட, தனது பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு வாய்ப்புக் கொடுக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை இலங்கைத் தீவில், நாடாளுமன்ற பாதையில் இருந்து வருகிறது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் நாடாளுமன்ற முறையில், குடியரசுத் தலைவர் என்ற ஒரு பதவி, நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப்படுகிறது. அப்படி தேர்வு செய்யப்படுகின்ற குடியரசுத் தலைவர், அரசியல் சட்டத்தின்படி தீர்மானகரமான முடிவெடுக்கும் இடத்தில் இருந்தாலும் கூட, நாடாளுமன்றத்தின் தலைமையிலிருக்கும் மத்திய அமைச்சரவையில் எடுக்கின்ற முடிவுகளையொட்டி தனது ஒப்புதலை கொடுப்பது என்ற ஒரு அதிகாரத்தைத் தான் அவர் கொண்டிருக்கிறார். அதையே நமது அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் சொல்லப்போனால், குடியரசுத் தலைவர் பொறுப்பை, ரப்பர் ஸ்டாம்பு பொறுப்பு என்ற அழைக்கிறார்கள். தலைமை அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் மட்டுமே இந்தியாவில் அதிகமான அதிகாரம் இருக்கிறது. அதேசமயம் அதிபர் ஆட்சிமுறை என்று கூறக்கூடிய, அமெரிக்கா போன்ற நாடுகளில் செனட்சபை என்றபெயரிலும், காங்கிரஸ் என்ற பெயரிலும், மேல்சபையும், கீழ்சபையும் இயங்கி வருகின்றன. அங்கே அதிபர் என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை என்று கூறுவதால், அவருக்கு அதிகமான அதிகாரம் என்பதாக ஆகிறது. இந்தியாவில் கூட, அவசரநிலையை இந்திராகாந்தி கொண்டுவந்த நேரத்தில், அனைத்து அதிகாரங்களையும் ஒருவரே கையில் வைத்திருக்கவேண்டிய தேவையை, ஆட்சியில் இருந்தவர்கள் உணர்ந்தபோது, குடியரசுத் தலைவர் ஆட்சிமுறையை கொண்டுவரலாமா என்ற விவாதம் பெருமளவு நடத்தப்பட்டது. ஆனாலும் 100 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், பரந்த அளவு நிரப்பரப்பில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நாடாளுமன்ற ஆட்சிமுறை தான் ஜனநாயக ரீதியாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்ற ஆரோக்கியமான விவாதம் எழுந்த காரணத்தினால், குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை கொண்டுவரப்படாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் இலங்கைத் தீவின் நிலைமையை வேறுபோலாகிவிட்டது. 1970ன் காலந்தொட்டு, இனவாத அணுகுமுறையை ஆளுகின்ற சிங்கள ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்ததனால், பொருளாதார வளர்ச்சி சீராக அங்கே இல்லாமலிருந்தது. 1980ன் தொடக்கத்தில் நேரடியான ரத்தகளரிகளாக மாறிவிட்ட இனவாத மோதல்கள், ஆள்வோரின் ஆசிபெற்று நடத்தப்பட்டதால், அங்குள்ள பொருளாதாரம் மேலும் சீரழிந்தது. உடைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் தமிழர்களுக்கு சொந்தமானது என்ற காரணத்தினால், சிங்கள காடையரின் கோபத்திற்குள்ளானது. அதன் விளைவாக மூலதனமிட்டு தொழில் செய்தவர்களும் கூட, அந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தனர். இதுவே அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இடியாக அமைந்தது. தமிழர்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் மத்தியில் போராளி குழுக்களை உருவாக்கின. அவற்றைச் சமாளிப்பதற்காக, சிங்களஅரசு ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே அரசுக்கு மேலும் நிதிச்சுமையை அதிகரித்தது. பொருளாதார சிக்கல்களில் சிக்கிவிட்ட சிங்கள அரசு, விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் அளிக்கமுடியவில்லை. அப்படிப்பட்ட சூழல், ஜனத விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இடதுசாரி கட்சியை மேலும் வலுவாக்கியது. அவர்கள் ஏற்கனவே 2முறை ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை, அரசுக்கு எதிராக செய்தவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க, ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சிமுறையை மாற்றியமைக்க எண்ணினார்கள். அப்படிப்பட்ட எண்ணத்தின் தொடர்ச்சிதான், அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவருவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து, கடைசியாக சந்திரிகா காலத்தில் கொண்டுவந்தார்கள். அதன்மூலம் அதிபர் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்துக்கொள்பவராக மாறிவிட்டார். இதுவே அதிகார குவிதலை ஒரே இடத்தில் கொண்டுபோய் கொட்டிவிட்டது. அதன்மூலம் மாறுபட்ட கருத்துள்ளவர்கள், அமைச்சரவையில் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. மங்கள சமரவீரா என்ற அமைச்சர், மகிந்த ராஜபக்சேயிடம் மாறுபட்ட கருத்துக் கொண்டு, வெளியேறி விமர்சனங்களை அள்ளி வீசிக்கொண்டு, அரசியல் நடத்திவருவது ஒரு உதாரணம். 3படைகளும் அதிபரின் அதாவது அரசத் தலைவரின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவது என்பது அதனுடைய அடுத்தக் கட்ட வளர்ச்சி. நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில், மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி கூட்டணி சார்பாகவும், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, பிரபல எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனத விமுக்தி பெரமுனா ஆகியவற்றுடன் சேர்ந்துள்ள 14 கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தும் பொது வேட்பாளராகவும், மனுச் செய்திருக்கிறார்கள். இதுதவிர நீண்ட காலமாக அரசியலிலிருக்கும் லங்கா சமசமாஜ கட்சி என்ற பழம்பெரும் இடதுசாரி கட்சியிடமிருந்து பிரிந்த நவசமசமாஜ கட்சியின் தலைவர் டாக்டர் விக்ரம பாகு கருணாரத்னேயும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். மகிந்தாவிற்கு எதிராக நிற்கின்ற பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்துள்ள கட்சிகளின் அறிவுறுத்தல்படி, அந்த பொதுவேட்பாளர் பொன்சேகா தான் வெற்றி பெற்றால் உடனடியாக அதிபர் ஆட்சிமுறையை கலைத்துவிட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறையை கொண்டுவருவேன் என உறுதி கூறியுள்ளார். அவரை ஆதரிக்கின்ற ஐதேகவும், ஜே.வி.பி.யும், மற்ற 14 கட்சிகளும் இதையே தங்களது தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்துள்ளார்கள்.

பொதுவாக வன்னிப்போரை நடத்தி வெற்றி பெற்றதில், மகிந்தாவிற்கு ஒரு மாபெரும் வரவேற்பு சிங்கள பெரும்பான்மையிடம் இருக்கிறது. அந்த வரவேற்பை, வாக்குகளாக மாற்றுவதற்கு தான் உடனடியான தேர்தலை அதிபர் பதவிக்கு மகிந்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பது நாடறிந்த செய்தி. அதேபோல வன்னிப்போர் வெற்றியை கணக்கில் கொண்டுதான் தென்னிலங்கையில் பொன்சேகாவும் வாக்குப் பெற போகிறார். அதேசமயம் தமிழர் வாக்குகளுக்காக, பொன்சேகா சில புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார். அதிபர் தேர்தலில் 50%க்கு மேல் எடுப்பவர் தான் அதிபராக முடியும். இதை 2பெரிய வேட்பாளர்களும் எட்டாமல் இருப்பது, தமிழர் கையில் தான் இருக்கிறது. 2வது சுற்றில்தான் அதிபருக்குத் தேவையான 50% வாக்குகளை பெறமுடியும் என்ற சூழலை தமிழர்கள் நினைத்தால் ஏற்படுத்த முடியும்.

Saturday, November 7, 2009

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?

நவம்பர் புரட்சி நினைவிலிருக்குமா?


ரஷ்ய புரட்சி என்று அழைக்கப்பட்ட 1917ம் ஆண்டு நடந்த புரட்சி, நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அது ஜார் மன்னருடைய ஆட்சியில் தூக்கி எறிந்து, சோவியத் யூனியன் என்ற புதியதொரு நாட்டை உருவாக்க உதவியது. நவம்பர் மாதத்தின் தொடக்கத்தை, ரஷ்ய புரட்சியை நினைவு கொள்வதற்காக உலகமெங்கிலும் கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, ஜனநாயகத்தை விரும்புவோரும், மன்னார் ஆட்சியை எதிர்ப்போரும், கொண்டாடுவது வழக்கம். போல்ஷ்க் கட்சி என்ற பெயரில், அப்போது லெனின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கப்பட்டது. சோவியத் யூனியனின் அந்த வெற்றி, உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை உணர்த்தியது.

அதன் விளைவாக உலகமெங்கிலும், 1917க்கு பிற்பாடு பல நாடுகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. உலகில் பெரும்பாலான நாடுகளில், ஆட்சி அதிகாரத்தில் பெரும் பண்ணையார்களோ, அண்ணாவின் வார்த்தையில் நிலம் ஆளும் முதலாளிகளோ, நிலங்களை குவித்து வைத்துக் கொண்டு இருக்கும் நிலத்திமிலங்களின் நலன்களை பாதுகாப்பவர்களோ இருந்து வந்தார்கள். அவர்கள் உள்நாட்டு முதலாளிகளைக் கூட, வளரவிடுவதில்லை. இதை மார்க்சிய வாதிகள், நிலப்பிரபுத்துவ ஆட்சி முறை என்பதாக வர்ணித்தார்கள். நிலம் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து, தொழிற்சாலைகள் சார்ந்த பொருளாதாரத்தை கொண்டு வரக்கூடிய சமுதாய அமைப்பை, முதலாளித்துவ சமுதாய அமைப்பு என்று அழைக்கிறார்கள்.

அப்படி நிலம் சார்ந்த பொருளாதாரமான, நிலப்புரபுத்துவ சமுதாய அமைப்பை, மாற்றியமைத்து முதலாளித்துவ சமுதாய அமைப்பை ஏற்படுத்துவதற்கு உள்ள முயற்சி என்பது வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறியிருக்கிறது. அது வெற்றி பெற்ற நாடுகளின் சமுதாய அமைப்பை, முதலாளித்துவ அமைப்பு என்பதாக அழைப்பதும், அத்தகைய நாடுகளை முதலாளித்துவ நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம். அதுபோல புதிய சமுதாய அமைப்பை உருவாக்கிய நாடுகளாக, இங்கிலாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளை குறிப்பிடலாம்.

ஐரோப்பிய நாடுகளில், ஜெர்மன் நாட்டில் வளர்ந்து இருந்த முதலாளித்துவ அமைப்பை நேரில் அனுபவித்த காரணத்தினால்தான், அங்குள்ள தொழிலாளர்களது அவல நிலையை விரிவாக தெரிந்து கொண்டு, அதன் மீது ஒரு சமூக, பொருளாதார, அரசியல் ஆய்வுகளை செய்த அடிப்படையில்தான், காரல்மார்க்ஸ் தனது மூலதனம் என்ற புத்தகத்தை எழுத முடிந்தது. அதில் அவர் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை தூக்கி எறிந்து விட்டு முதலாளித்துவ சமுதாய அமைப்பு அமைக்கப்பட்ட விவரத்தை கூறுகிறார்.

மூலதனம் புத்தகம் அரசியல் பொருளாதாரம் பற்றி அடிப்படையாக விவரிக்கப்பட்டிருந்தாலும், காரல்மார்க்ஸ் எழுதிய மற்ற புத்தகங்களிலிருந்து, முதலாளித்துவத்தின் மூல வேர்களை அவர் விளக்கியிருப்பதை அறியமுடிகிறது. தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற முதலாளிகளுடைய ஆட்சி அதிகாரத்தில், தனது உழைப்பு சக்தியை விற்று விட்டு, அதன் ஒரு பகுதியை மட்டும் கூலியாக பெறுகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி அவர் எழுதுகிறார்.

நிலவுடமை சமுதாயத்தில் வாழ்ந்து வரும் பெருவாரியான உலக மக்களுக்கு, வெல்லப்படமுடியாத, வளர்ச்சியடைந்த, விஞ்ஞானத்தை சார்ந்த சக்தி, முதலாளித்துவ அமைப்பு என்ற எண்ணமே இருந்தது. அப்படிப்பட்ட முதலாளித்துவ சமுதயாத்தைக்கூட, தூக்கி எறிய முடியும் என்றும், தொழிலாளி வர்க்கத்தினுடைய தலைமையில் ஒரு ஆட்சியை நிறுவிக்கொள்ள முடியும் என்றும், உலக மக்களுக்கு நிரூபித்துக்காட்டியது, ரஷ்யாவின் நவம்பர் புரட்சி. அதனால்தான் உலகமெங்கிலும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு, ஒரு ஒளிவிளக்கு போல, ரஷ்யாவில் நடந்த போல்ஷ்விக் புரட்சி தோன்றியது. அதன் மூலம் நிலமற்ற, ஏழை உழவர்கள் உட்பட, அனைத்து உழைக்கும் மக்களுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கு செல்லும் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி, சமுதாய அமைப்பையே மாற்றியமைக்க முடியும் என்ற புதிய உண்மையை புரிய வைத்தது 1917ன் நவம்பர் புரட்சி.

அதனால்தான் அத்தகைய ரஷ்ய புரட்சிக்கு பிறகு, உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இத்தகைய நம்பிக்கை ஏற்பட்டு, பல நாடுகளில் பொதுவுடமை கருத்துக்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளை உருவாக்கினார்கள். ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் என்ற மன்னன் கொடுங்கோலன் என்று நம் முன்னால் வர்ணிக்கப்படுகிறது. பாரதியாரும் கூட, கொடுங்கோலன் ஜார் வீழ்ந்தான். ஆவென எழுந்தது யுகப்புரட்சி என்று எழுதுகிறார்.

மாகாளி கண் திறந்தால் என்பதாக தன்னுடைய நம்பிக்கையை, தனக்கு கிடைத்த புதிய நம்பிக்கையுடன் இணைத்து எழுதுகிறார் பாரதி. அத்தகைய முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுதான் இந்த நவம்பர் புரட்சி. செயின் பீட்டர்ஸ் பர்க்கை சுற்றி எழுந்த தன்னெழுச்சியான புரட்சியாக, பிப்ரவரியில் நடந்த புரட்சிகர செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. ஜார் ஆட்சியை தூக்கி எறிந்து தற்காலிக அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. அதன் பிறகு அக்டோபர் மாநிலத்தில் தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டு, போல்ஷ்விக் அரசாங்கம் நிறுவப்படுகிறது. ரஷ்யாவில் தற்காலிக அரசாங்கம் நிறுவப்படும் போது, டூமா என்று அழைக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பு முறை ஏற்படுத்தப்படுகிறது.

சோவியத்துக்கள் என்பது தொழிலாளர்களுடைய கவுன்சில்கள் என்று பொருள்படும். பிப்ரவரி புரட்சி என்று அழைக்கப்பட்ட ரஷ்யாவின் புரட்சி முதல் உலகப் போர் கால கட்டத்தில் நடந்தது. அப்போது ரஷ்யாவின் ராணுவம் பெருமளவுக்கு தாக்கப்பட்டு பின்வாங்கியிருந்தது. அதனால் சிப்பாய்களுக்குள் கலவரம் நீடித்தது. தற்காலிக அரசாங்கத்தின் தலைமை பொறுப்பிலிருந்த சோசலிச சிந்தனையாளர்கள், இடது சாரி திசைக்கு அதை எடுத்து சென்றார்கள். குழப்பமான சூழ்நிலையில், தொடர் கலகங்களும், வேலைநிறுத்தங்களும் நடந்தன. தற்காலிக அரசாங்கம் ஜெர்மனி நாட்டுடன் சேர்ந்து கொண்டு, போல்ஷ்விக்குகைளயும், மற்ற சோசலிச பிரிவுகளையும் இணைத்து கொண்டு செயல்பட்டன.

செம்படை ஒன்றை கட்டி அதை ஆயுதம் தாங்கிய படையாக உருவாக்கியிருந்த போல்ஷ்விக்குகள், அதன் மூலம் எளிதாக ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரமுடிந்தது. அரசாங்க அதிகாரத்திலும், அனைத்து பொருட்களிலும், போல்ஷ்விக்குகள் அமர்த்தப்பட்டார்கள். 1918ல் நடந்த ஜெர்மனியுடனான ஒப்பந்தத்தில் போல்ஷ்விக்கள் கையெழுத்திட்டார்கள். ஆனாலும் கூட, போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் என்ற இருசாரர் மத்தியில் உள்நாட்டு போர் போல மோதல் நடந்தது. அதில் போல்ஷ்விக்குகள் என்று அழைக்கப்பட்ட பெரும்பான்மையினர் என்று பொருள் கொண்ட லெனின் தலைமையிலான பிரிவினர் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் தான் சோவியத் ரஷ்யாவின் ஒன்று பட்ட நாடுகள் என்ற யூ.எஸ்.எஸ்.ஆர். உருவானது.மேற்கண்ட அனுபவங்கள் பாட்டாளி வர்க்கம் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளர்களான, முன்னேறிய வர்க்கத்தின் தலைமையில், அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் அணி திரட்டப்பட்டு, மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் உழைப்பவர்கள் தான் என்ற உண்மையிருப்பதனால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற விவரம் உலகிற்கு கிடைத்தது.

கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படை என்பதாக அழைப்பார்கள். ரஷ்ய புரட்சியை வெற்றிகரமாக நடத்திய லெனினது பாதை என்பது, காரல்மார்க்ஸ் வழிவகுத்து கொடுத்த பாதையை, நடைமுறை படுத்தி செயலிலே வென்ற ஒரு நிகழ்வு அதனால் காரல்மார்க்சிற்கு பிறகு, உலகமெங்கிலும் பெரும்பான்மையாக அவரை பின்பற்றியவர்கள், லெனினை ஏற்றுக் கொண்டு, அவரது அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, லெனினிஸ்டுகளாக பவனி வந்தார்கள். இன்னமும் கூட, மார்க்சியம் என்ற சமூக அறிவியல் தத்துவத்திற்கு, லெனினது பங்களிப்பு புதிய, புதிய படைப்பாற்றல் மிக்க, உலகம் பற்றிய சித்தரிப்பு என்பதை மறுக்க முடியவில்லை.லெனினது ரஷ்யாவை நேரில் சென்று பார்த்து வந்த தந்தை பெரியார், அதே பாதையில் சமத்துவத்தை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தார்.

தந்தை பெரியாரை ரஷ்யநாடு சென்று, அனுபவங்களை பார்த்து வருவதற்கு ஏற்பாடு செய்த, பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடி, சிந்தனை சிற்பி சிங்காரவேலர். இந்த சிங்கார வேலர் சென்னையில் உள்ள, மயிலாப்பூரில் நடுக்குப்பத்தில், ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர். சிங்கார வேலரது செயல்பாடுகளும், கருத்துகளும் கூட, இன்று வரை உயிர்ப்புடன் நிற்கிறது. அதனால் இந்த நவம்பர் மாதம், உலக வரலாற்றிலிருந்து நமக்கு அதிகமான பலத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கலாமா?